Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இரட்டை டம்ளர் முறை; தொடரும் ஜாதி வெறிகள்

இரட்டை டம்ளர் முறை; தொடரும் ஜாதி வெறிகள்
, புதன், 5 ஜூன் 2013 (20:11 IST)
FILE
ஈரோடு மாவட்டத்தில் பல ஊர்களில் இன்றும் கூட டீ கடைகளில் இரட்டை டம்ளர் முறையை கடைபிடிப்பதாக ஆதித்தமிழர் பேரவையின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது.

ஆதித்தமிழர் பேரவையின் மொடக்குறிச்சி ஒன்றிய செயலாளர் ஆறுமுகம் மற்றும் பொறுப்பாளர்கள் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு கொடுத்தனர்.

மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது, ஈரோடு மாவட்டம் மலையம்பாளையம், சிவகிரி, அரச்சலூர், பாரப்பாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள டீக்கடைகளில் இரட்டை டம்ளர் முறை உள்ளது. உயர்ஜாதியினருக்கு ஸ்டீல் டம்ளரில் டீ கொடுக்கிறார்கள். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர் சென்றால் தனியாக பிளாஸ்டிக் டம்ளரில் டீ கொடுக்கிறார்கள்.

கண்ணாடி டம்ளரில் டீ கேட்டால் அந்த கிளாசை கழுவி டீ வாங்கி குடிக்க சொல்கிறார்கள். இது தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினரை இழிவுபடுத்துவதாக அமைந்துள்ளது. எனவே இரட்டை டம்ளர் முறையை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

பொதுவாக கொங்கு மாவட்டங்கள் என்று கூறப்படும் கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் ஜாதி பாகுபாடுகள் அதிகம் காணப்படுகிறது. அங்கு வாழும் குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்த பெரும்பாலான மக்கள் அனைவரும் பொருளாதார ரீதியாக முன்னேறி உள்ளனர். அதன் காரணமாகவே அப்பகுதிகளில் அவர்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது.

டீ கடைகளில் இரட்டை டம்ளர் முறை மட்டும் அல்ல, தாழ்த்தப்பட்ட மக்களை அப்பகுதியில் உள்ள பெரும்பாலான கோவில்களில் உள்ளே செல்ல அனுமதிப்பது இல்லை, இது போன்ற ஜாதிக் கொடுமைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். பல ஊர்களில் உள்ள கோவில்களை அரசு அற நிலையத்துறை இன்றளவும் கூட ஏற்று நடத்துவதற்கு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அப்படியே அதற்கான முயற்சிகளை யாராவது செய்தால், அவர்களை பணத்தின் மூலமாகவோ, வன்முறைச் செயல்களின் மூலமாகவோ தடுத்து நிறுத்துகிறார்கள்.

இது போன்ற ஜாதி வெறிச் செயல்களை அரசும் கண்டுகொள்ளாமல் இருப்பதற்கு காரணம் என்னவென்று தான் புரியவில்லை. அதையும் மீறி தாழத்தப்பட்ட மக்கள் எதிர்த்து கேள்வி கேட்டால், கேட்பவர்களை அடக்கு முறைகளின் மூலமாக கையாள்கிறார்கள். அரசு அதிகாரிகளும், காவல்துறை அதிகாரிகளும் பணம் வைத்திருக்கும் உயர் ஜாதிக் காரர்கள் என்று கருதப்படுபவர்களுக்கே சாதகமாக நடந்து கொள்கிறார்கள்.

இதுபோன்ற சமூகநீதிக்கும், மனிதாபிமானத்திற்கும் முற்றிலும் எதிரான ஜாதி பாகுபாடுகளை, இதனால் பாதிக்கப்படும் தாழத்தப்பட்ட மக்கள் இன்னும் எத்தனை காலத்திற்கு அனுபவிக்கப் போகிறார்கள் என்பது யாருக்கும் தெரியாது.

அறிவியல் வளர்ச்சியே ஒரு நல்ல ஆரோக்கியமான சமுதாயம் வளருவதற்கு காரணமாக அமையும் என்பது இன்னும் பலருக்கு புரியவில்லை என்று தோன்றுகிறது. தாங்கள் நலமாகவும், வளமாகவும் வாழ்வதற்காக, ஜாதி பாகுபாடுகளை உயர தூக்கிப் பிடித்துக் கொண்டு அதன் மூலமாக பாமர மக்களான தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்க்குடியின மக்களை மிதித்து நசுக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

தாழ்த்தப்பட்ட மக்களை தினம் தினம் சமூக ரீதியாக ஒடுக்கி, இழி தொழிலில் உளழச் செய்து உணவுக்காக உழைத்து, அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதைத் தவிர, வேறு எந்த பொதுவான சிந்தனைகளையும் சிந்திக்க விடாமல் திட்டமிட்டு செய்து வரும் இது போன்ற குள்ளநரித் தனமான செயல்களை இந்த ஜனநாயக அரசு தடுத்து நிறுத்துமா?

சுதந்திரம் பெற்றும் சுதந்திரம் இல்லை, மன்னிக்கவும் சுதந்திரம் நாட்டிற்குத்தான், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இல்லை என்பது தெளிவாகிறது!

Share this Story:

Follow Webdunia tamil