ஆயினும், வெளிநாட்டு செலாவணி விகிதமாக இருந்தாலும், நிதிக் கொள்கையாக இருந்தாலும் இந்தியாவின் கொள்கைகளை வாஷிங்டனிலுள்ள அமெரிக்க பெடரல் ரிசர்வ் அமைப்பின் தலைவர்தான் முடிவு செய்கிறார். இதனால், இந்த நாட்டின் நிதிக் கொள்கையிலும், நமக்குள்ள சுதந்திரம் குறைக்கப்படுகிறது... அண்டை நாட்டிலுள்ள என் நண்பர் ஒருவர் அங்கு நிதியமைச்சராக ஆன பொழுது, நான் அவரை வாழ்த்தினேன். அதற்கு அவர் தந்த பதிலாவது: ‘என்னை நீங்கள் வாழ்த்த வேண்டாம். நான் ஒரு அரை மந்திரி, மற்றொரு அரை மந்திரி வாஷிங்டனில் இருக்கிறார்’.” (பக்கம் 108, 2000, ஏப்ரல் பதிப்பு)
அண்டை நாட்டு நிதியமைச்சர் கூறியதை நிதியமைச்சராக இருந்த மன்மோகன் சிங் அவர்கள் நினைவுபடுத்தியது அந்த ‘அரை நிதியமைச்சர்’ நிலைமையை இவரும் ஏற்றுக்கொண்டதாகத்தான் ஆகிறது. மேலும், 2004-இல் இந்தியாவின் பிரதமராக மன்மோகன் சிங் வந்த பிறகும், இடதுசாரிகள் உட்பட்ட பல கட்சிகளின் ஆதரவைப் பெற்றிருந்தாலும் வெளிநாட்டு மூலதன ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தும் எத்தகைய மாறுதலையும் இவர் செய்யவில்லை.
உலகளாவிய சந்தைப் பொருளாதாரம் என்பது வளர்ச்சியடைந்த நாடுகளால் அவைகளுக்குத் தேவைப்பட்ட வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. அதை இந்தியா அப்படியே பின்பற்றாமல் தனது வளர்ச்சிக்குத் தேவைப்பட்ட அளவுக்கு ஒழுங்குபடுத்திக் கட்டுப்பாடுகளுடன் செயல்படுத்தி இருக்க வேண்டும். வளர்ச்சி அடைந்த நாடுகள் கடைபிடிக்கும் உலகளாவிய பொருளாதார முறை, வளரும் நாடுகளிலும், ஏழ்மையிலுள்ள நாடுகளிலும் கடுமையான பாதிப்புகளை உண்டாக்கியிருக்கிறது. நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பொருளாதார நிபுணர் ஜோஸப் ஸ்டிக்லிட்ஸ் அவர்கள் இது பற்றிக் கூறியிருப்பதாவது:
“உலகளாவிய பொருளாதார முறையின் கீழ் கட்டவிழ்த்து விடப்பட்ட சந்தை அமைப்பின் வலிவை வளரும்-ஏழ்மை நாடுகளால் பெரும்பாலும் கட்டுப்படுத்த முடியவில்லை. அரசாங்கங்கள் சில அதைக் கட்டுப்படுத்த முயற்சி செய்தால், வரக்கூடிய வெளிநாட்டு மூலதனம் வேறு பக்கங்களுக்குத் திருப்பிவிடப்படுவதை சம்பந்தப்பட்ட அரசாங்கங்கள் தடுத்துவிட முடிவதில்லை.” (பக்கம் 20, ‘Making Globalisation Work’, 2006 பதிப்பு.)
இந்தியா போன்ற வளர்ச்சி அடைந்த நாடுகளை நோக்கி மேலை நாடுகளின் வியாபார நிறுவனங்கள் அடுத்தடுத்து நான்கு நூற்றாண்டுகளுக்கு முன் வந்தன. காலப்போக்கில் பொருளாதார வளர்ச்சி அடைந்த நிறுவனங்களின் மூலம் இந்தியாவின் அரசியல் முறையைக் கட்டுப்படுத்தி, மேலை நாடுகள் இந்தியாவின் மீது தமது அரசியல் ஆதிக்கத்தை நிலைநாட்டி, ஏகாதிபத்திய ஆதிக்கத்தை வளர்த்தன. இரண்டாவது உலகப்போருக்குப் பின் ஏகாதிபத்திய ஆதிக்கமுறை அகற்றப்பட்டு, பல நாடுகள் விடுதலை பெற்றன.
தற்பொழுது மீண்டும் வளர்ச்சி அடைந்த நாடுகளின் பொருளாதாரப் படையெடுப்பு இந்தியா போன்ற பல நாடுகளின் அரசியல் இறையாண்மையை முற்றிலும் பாதிப்பதாக உள்ளது. வெளிநாடுகளின் பொருளாதாரத் தொடர்புகள் மிகவும் தேவைப்படுகின்றன என்றாலும், நமக்குத் தேவையான முறையில், நமது நாட்டு மக்கள் அனைவருக்கும் தகுந்த வளர்ச்சி தரும் வகையில் உலகளாவிய பொருளாதாரத் திட்டங்களை ஒழுங்குபடுத்தி, கட்டுப்படுத்தக்கூடிய வலிவுடன் இந்தியா செயலாற்ற வேண்டும்.
தான்தோன்றித்தனமான முறையில் வெளிநாட்டு மூலதனங்களுக்கு வரவுகூறி, இந்தியப் பொருளாதாரத்தையும், இந்திய அரசியல் சுதந்திரத்தையும், வளர்ச்சியடைந்த நாடுகளிடம் அடகு வைத்துவிட்ட இத்தகைய ஆளத் தெரியாத-ஆள முடியாத-அலங்கோலமான அரை வேக்காடுகளின் ஆட்சியை மாற்றக்கூடிய வாய்ப்பு இந்திய வாக்காளர்களுக்குத் தற்பொழுது கிடைத்திருக்கிறது. இந்த நல்வாய்ப்பைப் பயன்படுத்தி நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் நல்லதொரு எதிர்காலத்தைத் தர, ஏற்றமிகு நல்லாட்சி அமைய வாக்காளப் பெருமக்கள் நல்வாக்கு தரவேண்டும்!