பெற்ற மகளையே கற்பழிக்க முயன்ற தந்தையை மகள் கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டார். ஆனால் நீதிமன்றமோ, கற்பை பாதுகாக்க மகாத்மா காந்தி சொன்னதைத்தான் மனுதாரர் செய்திருக்கிறார் என்று கூறி, அவர் எந்த குற்றமும் செய்யவில்லை என்று கூறி அவர் மீதான வழக்கை ரத்து செய்துள்ளது.
சென்னை அடுத்துள்ள மாங்காட்டை சேர்ந்த சுதா (பெயர் மாற்றம்) 19 வயதான சுதா பி.எஸ்சி. பட்டப்படிப்பை படித்து வந்தார். இவரது தாய் 4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால், தந்தையுடன் வசித்து வந்தார்.
கடந்த 2011ஆம் ஆண்டு மே 17ஆம் தேதி இரவு வீட்டில் தனியாக இருந்த சுதாவை குடிபோதையில் வீட்டுக்கு வந்த தந்தை கத்திமுனையில் கற்பழிக்க முயன்றார். அப்போது, தன் கற்பை காப்பாற்ற சுதா கத்தியால் தந்தையை குத்திக் கொலை செய்தார்.
தந்தை படுகொலை செய்யப்பட்டது குறித்த சுதாவின் சகோதரர் மாங்காடு போலீசில் புகார் செய்தார். இந்த புகாரின் பேரில் சுதா மீது, உள்நோக்கம் இல்லாமல் கொலை சம்பவத்தை விளைவித்தல் (இந்திய தண்டனை சட்டம் 304(2) கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தது போலீஸ்.
சுதா மீதான வழக்கு ஸ்ரீபெரும்புதூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வழக்கில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டு விட்டது. இந்த நிலையில் தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சுதா மனுத் தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி நாகமுத்து, அதிரடியாக தீர்ப்பளித்துள்ளார். தன் உயிரையும், கற்பையும் பாதுகாக்க இறைவன் கொடுத்த நகம் மற்றும் பற்களை பயன்படுத்தி பெண்கள் தன்னை பாதுகாத்துக் கொள்ளவேண்டும் என்று மகாத்மா காந்தி கூறியுள்ளார். அதுபோல, கற்பை காப்பாற்றிக் கொள்ள தன்னை கற்பழிக்க வந்த மிருகமான தந்தையை மனுதாரர் கத்தியால் குத்திக்கொலை செய்துள்ளார்.
இந்த வழக்கில் மனுதாரர் சுதாவுக்கு எதிராக போலீசார் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகை, சாட்சி வாக்குமூலம், ஆவணங்கள் ஆகியவற்றை பார்க்கும்போது, மனுதாரர் கத்திமுனையில் தன்னை கற்பழிக்க வந்தவரிடம் இருந்து தன்னை பாதுகாத்துள்ளார் என்று நிரூபணமாகியுள்ளது.
எனவே, இவர் மீதான குற்ற விசாரணை தேவையில்லாதது. இவருக்கு எதிராக வழக்கு விசாரணை நடந்தால், அது மனித உரிமை மீறலாகும். எனவே மனுதாரர் எந்த குற்றமும் செய்யவில்லை என்று இந்த நீதிமன்றம் முடிவு செய்கிறது.
கற்பை காப்பாற்ற வேண்டிய தந்தையே, மிருகத்தனமாக இதுபோல் நடந்து கொண்டால், எந்த ஒரு பெண்ணும் தன்னை பாதுகாக்க இப்படித்தான் செயல்பட்டு இருப்பார். 80 ஆண்டுகளுக்கு முன்பு மகாத்மா காந்தி சொன்னதைத்தான், இப்போது சுதா செய்துள்ளார். ஒருவேளை, தந்தையை சுதா கொலை செய்யாமல் இருந்தால், அவர் கற்பழிப்பினால், பாதிக்கப்பட்டவராக இருந்திருப்பார்.
இந்த வழக்கை விசாரித்த போலீஸ் இன்ஸ்பெக்டர் எம்.அழகு நேர்மையுடன் செயல்பட்டுள்ளார். அவர் சுதா மீது கொலை வழக்கு பிரிவின் கீழ் வழக்கை பதிவு செய்யாமல், உள்நோக்கம் இல்லாமல் கொலை சம்பவத்தை விளைவித்தார் என்ற பிரிவின் கீழ் வழக்கை பதிவு செய்துள்ளார். அவரது நடவடிக்கையை பாராட்டுகிறேன்.
அதேநேரம் மாணவியான இந்த பெண்ணின் வயது, படிப்பு ஆகியவற்றை கருத்தில் கொள்ளாமல், 40 நாட்கள் தேவையில்லாமல் சிறையில் இருக்க வைத்துள்ளார். என்றாலும், சுதா அதிர்ஷ்டவசமாக தன் படிப்பை பாதியில் விட்டுவிடாமல், தொடர்ந்து படித்து வருகிறார்.
இதுவரை அனுபவித்த துன்பத்தில் இருந்து விடுபடும் விதமாக, சுதா மீதான வழக்கை ரத்து செய்கிறேன். அவருக்கு எதிராக ஸ்ரீபெரும்புதூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள குற்றப் பத்திரிகையையும் ரத்து செய்கிறேன் என்று நீதிபதி நாகமுத்து அதிரடியாக தீர்ப்பளித்துள்ளார்.