அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறி விட்டதாக புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார். தே.மு.தி.க., இடதுசாரி கட்சிகளும் உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டியிட்டாலும் அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகி விட்டதாகவே தெரிகிறது.
கடந்த சட்டப்பேரவை தேர்தலில் விஜயகாந்த் தலைமையிலான தே.மு.தி.க., மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், புதிய தமிழகம், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி ஆகிய கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா போட்டியிட்டார்.
4 மாதங்களே நீடித்த கூட்டணி உள்ளாட்சித் தேர்தலில் சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை தவிர தே.மு.தி.க. உள்ளிட்ட மற்ற கட்சிகள் அனைத்தும் தனித்தே போட்டியிடுகின்றன. இதற்கு ஜெயலலிதாவே காரணம் என்று கூறப்படுகிறது.
ஏற்கனவே சட்டப்பேரவை தேர்தலின் போது தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்தபோது 160 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்து பெரும் அதிர்ச்சியை கூட்டணி கட்சிகளுக்கு ஏற்படுத்தினார் ஜெயலலிதா. அப்போது இருந்தே கூட்டணி கட்சிகள் ஜெயலலிதா மீது அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது.
சட்டப்பேரவை தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தார் ஜெயலலிதா. 29 தொகுதிகளை கைப்பற்றிய விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவரானார். சட்டப்பேரவை தேர்தலில் இருந்து தொடர்ந்த கூட்டணி 4 மாதங்களில் கூட்டணி பிரிந்தது.
சட்டப்பேரவை தேர்தலில் என்ன முடிவை கையாண்டாரோ அதே முடிவையும் உள்ளாட்சித் தேர்தலில் கையாண்டார் ஜெயலலிதா. இடது சாரி கட்சிகளுடன் இடப்பங்கீட்டு பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்தபோதே திருச்சி தவிர 9 மாநகராட்சி மேயர் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார் ஜெயலலிதா.
இதனால், கூட்டணி கட்சித் தலைவர்களான விஜயகாந்த், ராமகிருஷ்ணன், தா.பாண்டியன் ஆகியோர் அதிர்ச்சியுடன் அதிருப்தி அடைந்தனர். ஆனால், அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள் பட்டியல் இறுதியான முடிவு அல்ல. மாறுதலுக்கு உட்பட்டது என்று அ.தி.மு.க. குழுவினர் தெரிவித்ததாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் ராமகிருஷ்ணன் கூறியிருந்தார்.
அப்படி கூறிய பிறகும் அ.தி.மு.க.வுடன் இடதுசாரி கட்சிகள் இடப்பங்கீட்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தது. அறிவித்த உறுதிமொழியை மீண்டும் காற்றில் பறக்கவிட்டார் ஜெயலலிதா. மீண்டும், பேரூராட்சி, நகராட்சி போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டிலை வெளியிட்டார்.
அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றிருந்த விஜயகாந்தின் தே.மு.தி.க. பேச்சுவார்த்தையில் பங்கேற்காத நிலையில் தனியாக போட்டியிடுவதாக அறிவித்தது. இதனால் யாரிடம் செல்வது என்று தெரியாமல் இருதலை கொல்லி பாம்பாக தவித்துக் கொண்டிருந்தது இடதுசாரி கட்சிகள். கடைசியில் விஜயகாந்துடன் கூட்டணி சேர்வது என்று முடிவு செய்தார் மார்க்சிஸ்ட் ராமகிருஷ்ணன். ஆனால் தே.மு.தி.க.வுடன் உடன்பாடு ஏற்படாத காரணத்தால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்தார் தா.பாண்டியன்.
இப்படி உள்ளாட்சித் தேர்தலோடு கூட்டணியை முறித்துக் கொண்டது அ.தி.மு.க. கூட்டணி கட்சிகள். இப்படி இருக்கையில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியும் அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறி விட்டதாக அறிவித்துள்ளார்.
தற்போது அ.தி.மு.க. கூட்டணியில் இருப்பது நடிகர் சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, செ.கு. தமிழரசனின் குடியரசு கட்சி, சேதுராமன் அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகம் மட்டுமே.
2014ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் இந்த கட்சிகள் கூட்டணி வைத்துக் கொள்ளுமா? அல்லது தனித்துப் போட்டியிடுமா? என்பது சந்தேகம்தான். அரசியலில் எதுவேண்டுமானாலும் நடக்கலாம்.
ஏற்கனவே தி.மு.க. கூட்டணி சிதறி விட்ட நிலையில், பா.ம.க., காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் உள்ளாட்சித் தேர்தலில் தனித்தே போட்டியிடுகின்றன. தனித்து போட்டியிடுவதால் யாருக்கு லாபம், யாருக்கு நஷ்டம் என்பது உள்ளாட்சி தேர்தல் முடிவுக்கு பிறகு தெரிந்துவிடும்.