இனியும் யாருக்காகவும் எதையும் நிரூபிக்கவேண்டியதில்லை - சேவாக்
, புதன், 19 மார்ச் 2014 (08:26 IST)
இன்னும் 3 ஆண்டுகள் தன்னால் இந்திய கிரிக்கெட்டிற்கு பங்களிப்பு செய்ய முடியும் என்று கூறிய அதிரடி மன்ன விரேந்தர் சேவாக், தனது திறமையை உலகிற்கு காட்டிவிட்டதாகவும் இனியும் யாருக்காகவும் எதையும் தான் நிரூபிக்கவேண்டியதில்லை என்றும் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் அளித்த பேட்டியிலிருந்து சில:இந்திய அணி தேர்வாளர்களின் கவனத்தை ஈர்ப்பதற்கு ஐ.பி.எல்.-ல் அசத்த வேண்டியது அவசியம் என்று கருதுகிறீர்களா? என்று கேட்கிறீர்கள். நான் ஏற்கனவே போதுமான ஆட்டங்களில் எனது திறமையை இந்த உலகிற்கு காட்டிவிட்டேன். இனியும் யாருக்காகவும் எதையும் நிரூபிக்க வேண்டியது அவசியம் இல்லை.
இப்போது ஷேவாக்குக்காகவும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காகவும் விளையாட வேண்டிய நேரம் இது. அபாரமாக விளையாடி ரன்கள் குவித்தால், சம்பந்தப்பட்டவர்கள் தானாகவே கவனித்து, எனது பெயரை மீண்டும் பரிசீலிப்பார்கள். ஆனால் இதை மனதில் வைத்து விளையாடினால் எனக்குள் நெருக்கடி தான் ஏற்படும்.