மீண்டும் பந்து வீச்சு சொதப்பல்! நியுசீலாந்து 303 ரன்கள் குவிப்பு!
, வெள்ளி, 31 ஜனவரி 2014 (10:23 IST)
வெலிங்டனில் நடைபெற்று வரும் நியூசிலாந்து இந்தியா அணிகள் மோதும் கடைசி ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா நியூசீலாந்தை முதலில் பேட் செய்ய அழைத்தது மீண்டும் டெய்லர் சதம் அடிக்க கேன் வில்லியம்சன் தொடர்ச்சியாக 5வது அரைசதம் எடுக்க பந்து வீச்சு மீண்டும் சொதப்பலாக அமைய நியூசீலாந்து 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 303 ரன்கள் எடுத்தது.
முதல் 5 ஓவர்களில் 3 மைடன்களுடன் 11 ரன்கள் கொடுத்து சிறப்பாக வீசிய மொகமட் ஷமி கடைசி 5 ஓவர்களில் 50 ரன்களை விட்டுக் கொடுத்து ஒரேயொரு விக்கெட்டை மட்டும் கைப்பற்றினார். புவனேஷ் குமாரும் ஓவருக்கு 6 ரன்கள் கொடுத்தார்.துவக்கத்தில் இந்திய பவுலர்கள் சிறப்பாக வீசினர் முதல் ஓவரில் பவுண்டரி இல்லாத முதல் மேட்ச் ஆக இது இருந்தது. உண்மையில் 32வது பந்தில்தான் ரிஸ்கான முதல் பவுண்டரி வந்தது நியூசீலாந்துக்கு. ஷமி முதல் 2 ஓவர்கள் மைடன் வீசினார் முதல் ரன்னையே 3வது ஓவரின் 5வது பந்தில்தான் கொடுத்தார் அதுவும் ரைடரின் எட்ஜ். ஷமிக்கு தோனி நல்ல கள வியூகம் அமைத்தார். 7 பேரை ஆஃப் ஸைடில் நிறுத்தினார் ஷமியும் நல்ல துல்லியமாக வீசினார்.
புவனேஷ் குமாரும் நன்றாக வீசி ரைடரின் எட்ஜைப் பிடித்து வெளியேற்றினார். மார்டின் கப்தில் அறுவையாகிப்போனார் 20 பந்துகளில் 2 ரன்கள் எடுத்து திணறி வந்தார். வருண் ஆரோன் அவருக்கு 10வது ஓவரில் கேட்ச் விட்டார். ஆனால் 13வது ஓவரில் அவரே கப்திலை வீழ்த்தி பரிகாரம் தேடிக் கொண்டார்.