ஈடன் பார்க் மைதானத்தில் நடந்த இருபதுக்கு இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியின் கடைசி பந்தில் தென் ஆப்பிரிக்கா அணி த்ரில் வெற்றி பெற்றது. கடைசி வரை போராடிய நியூஸிலாந்து அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக அந்த அணியில் டுமினி 38 ரன் எடுத்தார்.
அம்லா (33), டி வில்லியர்ஸ் (29), பர்னல் (22) ரன் எடுத்தனர். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்னில் வீழ்ந்தனர்.
166 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய நியூஸிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.
அந்த அணியின் ரைடர் அதிகபட்சமாக 52 ரன் எடுத்தார். தொடக்க வீரர்கள் நிக்கோல் (33), குப்தில் (26), மெக்குல்லம் (18) ரன்கள் எடுத்தனர்.
கடைசி வரை போராடி ரைடர் அணியின் ஸ்கோர் 158 ஆக இருந்தபோது போத்தா பந்தில் ஆட்டம் இழந்தது நியூஸிலாந்து தோல்வியை உறுதி செய்தது.
மற்றொரு முனையில் இருந்த ப்ராங்ளின் எந்த விதமான பதற்றம் அடையவில்லை. கடைசியில் 6 பந்தில் 8 ரன்கள் தேவை என்ற நிலையில் 20 ஓவரை வீச வந்தார் டி லன்கி. முதல் பந்தில் ப்ராங்கிளின் 1 ரன் எடுத்தார். 2வது பந்தை சந்தித்த மெக்குல்லம் ரன் எதுவும் எடுக்கவில்லை. 3வது பந்தில் மெக்குல்லம் ஆட்டம் இழந்தது தென் ஆப்பிரிக்கா அணிக்கு திருப்பு முனையாக அமைந்தது.
4வது பந்தில் ரன் எதுவும் எடுக்கப்படவில்லை. 5வது பந்தில் பிராஸ்வெல் ஆட்டம் இழந்தார். ஓவரின் கடைசி பந்தை டி லன்கி நோ பால் ஆக்கினார். இதனால் 1 பந்தில் 4 ரன்கள் தேவை என்ற நிலையில் ப்ரி ஹிட் வாய்ப்பு நியூஸிலாந்து அணிக்கு கிடைத்தது. ஆனால் அந்த வாய்ப்பை நியூஸிலாந்து தரவிட்டது. கடைசி பந்தில் செளதி ரன் ஏதும் எடுக்கவில்லை. இதனால் தென் ஆப்பிரிக்கா அணி 3 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
3 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா கைப்பற்றியது. 2 விக்கெட்டுகளை கைப்பற்றிய போத்தா ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.