சென்னை மாதவரம் வி.ஆர்.டி. நகரை சேர்ந்தவர் பாபு. அவருடைய மகள் அபிராமி (வயது 23). துணை நடிகை. பல்வேறு படங்களில் குழுநடனத்தில் நடனம் ஆடி உள்ளார். அவர், கடந்த அக்டோபர் மாதம் தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா விழாவுக்கு நடனம் ஆடுவதற்காக வந்தார்.
தசரா விழாவில் நடனம் ஆடும் போது, உடன்குடி அருகே உள்ள தேரியூரை சேர்ந்த பல் மருத்துவர் முத்துலிங்கம் என்பவருடைய மகன் முத்துக்குமரனும் (22) நடனம் ஆடினார். அவர் வள்ளியூரில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 4-ம் ஆண்டு படித்து வருகிறார். அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.
இருவரும் ஒருவருக்கொருவர் செல்போன் எண்ணை பரிமாறிக்கொண்டனர். அதன்பிறகு அபிராமி சென்னைக்கு சென்று விட்டார். இருவரும் செல்போனில் அடிக்கடி பேசி வந்தனர். இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டு அபிராமியும், முத்துக்குமரனும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். முத்துக்குமரன் கடந்த டிசம்பர் மாதம் அபிராமியை சந்திப்பதற்காக சென்னை சென்றார்.
அப்போது அபிராமியின் உறவினர்கள், காதலர்களை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தினர். அதன்பிறகு முத்துக்குமரனும், அபிராமியும் அங்குள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டு அங்கேயே குடும்பம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.