ஆஸ்ட்ரேலியா அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் 7 விக்கெட் வீழ்த்தி ஆச்சரியப்படுத்திய காஷ்மீர் வீரர் பர்வேஸ் ரஸ்சூல், ஐ.பி.எல். கிரிக்கெட்டில் புனே வாரியர்ஸ் அணிக்காக ஒப்பந்தமாகியுள்ளார்.
ஆஸ்ரேலியாவுக்கு எதிரான இரண்டு நாள் பயிற்சி கிரிக்கெட்டில் இந்திய கிரிக்கெட் வாரிய லெவன் அணிக்காக களம் கண்ட ஜம்மு-காஷ்மீரை சேர்ந்த ஆல்-ரவுண்டர் பர்வேஸ் ரஸ்சூல் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி பிரமாதப்படுத்தினார். மேலும் 36 ரன்களும் அந்த ஆட்டத்தில் விளாசினார். ஏற்கனவே ரஞ்சி கிரிக்கெட்டிலும் அவரது திறமையான பந்து வீச்சு பலரையும் ஆச்சரியப்படுத்தியது.
இதனால் அவரை இழுக்க ஐ.பி.எல். அணிகள் போட்டா போட்டியில் இறங்கின. இறுதியில் அவரை புனே வாரியர்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது.
இது குறித்து 24 வயதான பர்வேஸ் ரஸ்சூல் கூறுகையில், சில ஐ.பி.எல். அணிகள் என்னை அணுகின. ஆனால் புனே வாரியர்ஸ் அணி தான் என்னை முதலில் தொடர்பு கொண்டது. ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்திற்கு முன்பாக அவர்கள் என்னிடம் பேசினார்கள். முதலில் அழைத்ததன் அடிப்படையில் புனே அணியுடன் இணைய முடிவு செய்தேன்.
ஐ.பி.எல். கிரிக்கெட்டுக்காக விளையாட இருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இது எனக்கு கிடைத்த கவுரவம். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இருந்து ஐ.பி.எல். கிரிக்கெட்டில் விளையாட போகும் முதல் கிரிக்கெட் வீரர் நான் தான். புனே வீரர்களின் அறையில் ஆஸ்ட்ரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க்குடன் பேசுவதற்கு கிடைத்த வாய்ப்பின் மூலம் எனது கனவு நனவாகி இருக்கிறது.
இதே போல் யுவராஜ்சிங்குடன் பழகுவதற்கு கிடைத்த வாய்ப்பு கூடுதல் போனசாக நினைக்கிறேன். நான் இப்போது தான் எனது கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கியுள்ளேன். இன்னும் என்னை மேம்படுத்திக்கொள்ள ஐ.பி.எல். கிரிக்கெட் உதவும் என்றார்.
அவரை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் இழுக்க முயற்சித்துள்ளது. ஆனால் அவர்களது முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை.
புனே அணியின் நிர்வாகி ஒருவர் கூறுகையில், பர்வேஸ் ரஸ்சூல் எங்கள் அணியின் சொத்தாக இருப்பார். அவர் திறமையான ஆல் ரவுண்டர். ஆடும் லெவன் அணியில் 4 வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே களம் இறக்க முடியும். இப்படிப்பட்ட சூழலில் அவரை போன்ற பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் அசத்தக்கூடிய ஆல் ரவுண்டர் அணிக்கு நல்ல தேர்வாக இருப்பார் என்றார்.
இந்திய அணிக்காக விளையாடிய வீரர்கள் மட்டுமே ஏலம் மூலம் விற்கப்படுவார்கள். ரஸ்சூல் முதல்தர கிரிக்கெட் வீரர் என்பதால் அவரை விதிகளுக்குட்பட்டு நேரடியாக ஒப்பந்தம் செய்து கொள்ளலாம். அந்த வகையில் தான் புனே அணி அவரை பெற்றிருக்கிறது. அவரது ஊதியம் ரூ.20 லட்சமாகும்.