இந்தியா- தென்னாப்ரிக்கா இடையேயான 3வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியை யுவராஜ் சிங்கின் அதிரடியான ஆட்டத்தினால் வென்ற இந்தியா 3 போட்டிகளைக் கொண்ட தொடரையும் கைப்பற்றியது.
ஸ்டோர்மோன்டில் உள்ள சிவில் சர்வீஸ் கிரிக்கெட் மைதானத்தில் நேற்றுத் துவங்கிய ஒரு நாள் கிரி்க்கெட் போட்டி மழையின் காரணமாக 31 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது.
பூவா - தலையா வென்ற இந்திய அணி முதலில் ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து தென்னாப்ரிக்கா முதலில் களமிறங்கியது.
தென்னாப்ரிக்காவின் துவக்க ஆட்டக்காரர்களாக வில்லியர்சும், வானும் களமிறங்கினர். வான் ரன் ஏதும் எடுக்காமல் 2ஆம் ஓவரிலேயே ஆட்டமிழந்தார். அடுத்து வந்த காலிசும் 3ஆம் ஓவரில் டக் அவுட் ஆகி ஆட்டமிழக்க, வில்லியர்சும் நீண்ட நேரம் நிற்கவில்லை. 35 பந்துகளில் 15 ரன்கள் எடுத்து 12வது ஓவரில் ஆட்டமிழந்தார். அவர் ஆட்டமிந்தபோது தென்னாப்ரிக்கா 28 ரன்கள் மட்டுமே எடுத்து 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது.
வில்லியர்சை அடுத்து வந்த டுமினி வந்த வேகத்திலேயே முதல் பந்தில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.
அணியின் நிலைமையை புரிந்து கொண்டு கிப்ஸ் நிதானமாக ஆடினார். 67 பந்துகளில் 56 ரன்களை எடுத்தார் கிப்ஸ். அவருடன் கெம்ப் ஈடுகொடுத்து ஆடினார். அடிக்க வேண்டிய பந்துகளை சிறப்பாக அடித்து ஆடி 61 பந்துகளில் 61 ரன்களை எடுத்தார். எதிர்பார்த்திராத நிலையில் கிப்ஸ் ஆட்டமிழந்ததும் அடுத்து ஆட வந்த பெளச்சர் 11 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஹால் 1 ரன் எடுத்து கார்த்திக்கிடம் அவுட் ஆனார்.
இதையடுத்து தென்னாப்ரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 31 ஓவாக்ளில் 7 விக்கெட்டுகளை இழந்து 148 ரன்களை மட்டுமே எடுத்தது.
இந்தியா சார்பில் அகார்கர், கங்கூலி, டெண்டுல்கர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். கான் 1 விக்கெட்டை வீழ்த்தினார்.
149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் அடுத்து ஆட வந்த இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக கங்கூலியும், டெண்டுல்கரும் களமிறங்கினர். டெண்டுல்கர் துவக்கத்திலேயே அதிரடியாக ஆடத் துவங்கினார். இதனால் நிடினியின் பந்தில் பெளச்சரிடம் கேட்ச் கொடுத்து 8 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கம்பீரும் 5 ரன்களில் ஆட்டமிழக்க அணியின் ரன் எண்ணிக்கை சரிவை நோக்கிச் சென்றது.
அடுத்து ஆட வந்த திராவிடுடன் இணைந்து கங்கூலி நிதானமாக ஆடினார். 25 பந்துகளில் 18 ரன்களை எடுத்தார். எனினும் 8வது ஓவரில் கங்கூலி ஆட்டமிழக்க யுவராஜ் சிங் ஆட வந்தார்.
திராவிடும், யுவராஜூம் இணைந்து அணியின் ரன் எண்ணிக்கையை உயர்த்தினர். யுவராஜ் சிங் 82 பந்துகளில் 59 ரன்களை எடுத்து அணியின் வெற்றிக்கு வித்திட்டு கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
24வது ஓவரில் 38 ரன்கள் எடுத்திருந்த திராவிட் ஆட்டமிழந்தபோது இந்திய அணியின் ரன் எண்ணிக்கை 108 ஆக இருந்தது.
அணி வெற்றி பெற இன்னும் 41 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில் ஆட வந்த தோனி 11 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 14 ரன்களை எடுத்தார். மறுமுனையில் யுவராஜ் சிங்கும் அதிரடியாக ஆடி இந்திய அணியை 30.2 ஓவர்களில் 152 ரன்கள் எடுக்க உதவினர்.
இதனால் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட இந்த தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இந்திய அணியின் வெற்றிக்கு உதவிய யுவராஜ் சிங்குக்கும், கடந்த போட்டிகளில் 90 ரன்களுக்கு மேல் எடுத்த டெண்டுல்கருக்கும் தொடர் நாயகன் விருது பகிர்ந்தளிக்கப்பட்டது.