ஐ.பி.எல். இறுதியில் பங்கேற்ற அணிகள், இங்கிலாந்து, ஆஸ்ட்ரேலியா, தென் ஆப்பிரிக்கா உள் நாட்டு இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகளில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற 8 அணிகளுக்கு இடையேயான சாம்பியன்ஸ் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரும் இந்தியாவில் நடத்தப்படலாம் என்று தெரிகிறது.
8 அணிகளுக்கு இடையே 15 போட்டிகள் நடைபெறும் இந்த தொடர் 15 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டு செப்டம்பர் கடைசியில் அல்லது அக்டோபர் துவக்கத்தில் இந்த தொடர் நடைபெறும் என்று கூறியுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இந்தியாவிலோ மத்திய கிழக்கிலோ இந்த போட்டிகள் நடைபெறும் என்று கூறியுள்ளது.
இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத் தலைவர் ஜைல்ஸ் கிளார்க், ஐ.பி.எல். தலைவர் லலித் மோடி, தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் சங்க தலைவர் நார்மன் ஆரென்ட்ஸ் ஆகியோரிடையே நேற்று நடந்த சந்திப்பில் இந்த முடிவு எட்டப்பட்டது.