சர்ச்சைக்குரிய தென்சீனக் கடலில் மீள் சீரமைப்பு நடவடிக்கைகளை சீனா உடனடியாகவும், நிரந்தரமாகவும் நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா கூறியுள்ளது.
சிங்கப்பூரில் நடந்த பாதுகாப்பு மாநாடு ஒன்றில் பேசிய அமெரிக்க பாதுகாப்புச் செயலர், ஆஸ் கார்ட்டர் அவர்கள், அந்தப் பகுதியில் சீனாவின் செயற்பாடு, சர்வதேச நியமங்களுக்கு முரணானது என்று கூறியுள்ளார்.
ஆனால், கார்ட்டரின் இந்த விமர்சனம் ஆக்கபூர்வமானது அல்ல என்று சீன அதிகாரி கூறியுள்ளார்.
சீனாவால் நிர்மாணிக்கப்படும் அந்த செயற்கைத் தீவில், நடப்பதாகக் கூறப்படும் இராணுவமயமாக்கல், இராணுவ முரண்களுக்கு இட்டுச் செல்லும் ஆபத்து உள்ளது என்று கார்ட்டர் கூறியுள்ளார்.
ஆனால், சர்வதேச சட்டங்கள் செல்லுபடியாகும் அனைத்து இடங்களிலும் அமெரிக்க படைகளின் விமானங்களும், கப்பல்களும் சென்று செயற்படும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.