Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஸ்ரீபவனின் காலத்தில் நீதித்துறை வலுவடைந்து முன்னேறும்': சி.வி.

ஸ்ரீபவனின் காலத்தில் நீதித்துறை வலுவடைந்து முன்னேறும்': சி.வி.
, ஞாயிறு, 1 பிப்ரவரி 2015 (07:23 IST)
இலங்கையின் புதிய தலைமை நீதியரசராக பதவியேற்றுள்ள கே. ஸ்ரீபவனின் காலத்தில் நாட்டின் நீதித்துறை வலுவடைந்து நல்ல நிலையை நோக்கிச் செல்லும் என்று ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதியரசரும் வடக்கு மாகாண முதலமைச்சருமான சி.வி. விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.
 
இலங்கையின் நீதித்துறை கடந்த அரசாங்கத்தின் காலத்தில் பல்வேறு பின்னடைவுகளை சந்தித்திருந்ததாக சுட்டிக்காட்டப்பட்டுவந்தது.
 
இந்த சூழ்நிலையிலேயே, புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசாங்கம் நாட்டின் 44வது தலைமை நீதியரசராக கே.ஸ்ரீபவனை நியமித்துள்ளது.
 
உச்சநீதிமன்றத்தில் பணியாற்றும் மூத்த நீதியரசர் என்ற ரீதியில் கே. ஸ்ரீபவனுக்கு தலைமை நீதியரசர் பதவி கிடைத்திருப்பதை வரவேற்பதாகவும் சி.வி. விக்னேஸ்வரன் பிபிசி தமிழோசையிடம் கூறினார்.
 
இலங்கை சட்டக்கல்லூரியில் கே. ஸ்ரீபவன் தனது மாணவராக கல்வி கற்றவர் என்பதையிட்டு இரட்டிப்பு மகிழ்ச்சி அடைவதாகவும் விக்னேஸ்வரன் கூறுகின்றார்.
 
எனினும், நீண்டகால பிரச்சனைகளை ஒரேநாளில் தனியொரு நபரினால் தீர்த்துவிட முடியாது என்றும் வடக்கு மாகாண முதலமைச்சர் தெரிவித்தார்.

webdunia


 
சட்டமா அதிபர் திணைக்களத்திலிருந்து நீதித்துறைக்கு முறைப்படி வந்தவர் ஸ்ரீபவன் என்றும் கூறிய விக்னேஸ்வரன், 'ஆனால் மற்றவர்களும் அவ்வாறே கொண்டு வரப்பட்டார்கள். அவர்கள் முன்னேற வேண்டியவர்களை தடுத்து மேலே கொண்டுவரப்பட்டவர்கள்' என்றார் விக்னேஸ்வரன்.
 
சில நீதியரசர்கள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவராக ஆக்கப்பட்டு, சிறிதுகாலத்தில் உச்சநீதிமன்றத்துக்குள் புகுத்தப்பட்டவர்கள் என்றும் முன்னாள் நீதியரசர் சுட்டிக்காட்டினார்.
 
எனினும், ஸ்ரீபவன் மேன்முறையீட்டு நீதிமன்றத்திலும் இருந்து, தனக்கு உரிய காலம் வந்தபோதே உச்சநீதிமன்ற நீதிபதியாக முறைப்படி நியமனம் பெற்றுவந்தவர் என்றும் விக்னேஸ்வரன் கூறினார்.
 
முன்னைய அரசாங்கத்தின் ஆட்சியில் தலைமை நீதியரசர் ஷிராணி பண்டாரநாயகா பதவிநீக்கம் செய்யப்பட்டு அந்த இடத்திற்கு மொஹான் பீரிஸ் நியமிக்கப்பட்டார்.
 
எனினும் புதிய அரசாங்கம், ஷிராணி பண்டாரநாயக்க பதவி நீக்கப்பட்டது செல்லாது என்று அறிவித்து, சில தினங்களுக்கு முன்னர் அவரை மீண்டும் பணியில் அமர்த்தியது.
 
ஆனால், அவர் பணியிலிருந்து சொந்த விருப்பத்தின் பேரில் ஓய்வுபெற்றதை அடுத்து, கே. ஸ்ரீபவன் தலைமை நீதியரசராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil