சிரியாவில் பாலைவன நகரான பால்மெய்ராவை கைப்பற்றியதை அடுத்து, இஸ்லாமிய அரசு அங்கு நாட்டின் அரைவாசிக்கும் அதிகமான பிராந்தியத்தை தமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக சிரியாவின் செயற்பாளர்கள் குழு ஒன்று கூறியுள்ளது.
அரசாங்க ஆதரவு படைகளிடம் இருந்து தற்போதுதான் அவர்கள் மக்கள் செறிந்துவாழும் ஒரு நகரை நேரடியாக கைப்பற்றியுள்ளனர்.
தொல்பொருட்கள் நிறைந்த இடத்துக்கு பெயர் போனது இந்த நகரம். ஆகவே அவை இஸ்லாமிய அரசு தீவிரவாதிகளால் அழிக்கப்படலாம் என்ற அச்சமும் எழுந்துள்ளது.
அந்த தொல்பொருள் பகுதிக்குள் தீவிரவாதிகள் நுழைந்துள்ளதாக தெரிகிறது. ஆனால், அவர்கள் அதனை இதுவரை அழிக்கத் தொடங்கியதாக தெரியவில்லை என்று சிரியாவின் மனித உரிமை கண்காணிப்பகம் என்ற அமைப்பு கூறியுள்ளது.