ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஐந்து மீனவர்களுக்கு இலங்கையில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டிருப்பதையடுத்து, தண்டிக்கப்பட்டவர்களின் உறவினர்கள், மீனவர்கள், பொதுமக்களில் ஒரு பகுதியினர் ராமநாதபுரம் பகுதியில் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால், அந்தப் பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகிறது. பாம்பனிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் சாலையில் மரங்களை வெட்டிப் போட்டும், கற்களைப் போட்டும் தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
பாம்பனிலிருந்து ராமேஸ்வரம் சென்ற அரசுப் பேருந்து ஒன்று தங்கச்சி மடத்தில் தீ வைத்துக் கொளுத்தப்பட்டது. நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்குக் காவல் துறையினர் முயன்று வருகின்றனர்.
ராமேஸ்வரம் மீனவர்கள் ரயில் தண்டவாளங்களையும் மறித்து ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.