சுட்ட மண்ணால் ஆன பத்து பானைகள் இருக்கின்றன என்று வைத்துக்கொள்வோம். அவற்றை வைத்துக்கொண்டு எதுவும் செய்ய முடியாது. அவற்றை உடைத்தால் வெறும் துகள்களாகப் போய்விடும். இப்போது இந்த சுட்ட மண் பானைகளை மீண்டும் களி மண்ணாக ஆக்கினால்.. அதாவது அப்படிச் செய்ய ஒருமுறை இருக்கிறதென்று வைத்துக்கொண்டால்.. அப்போது பத்து பானைகளும் மீண்டும் களி மண்ணாகின்றன. இந்த பத்து களி மண்ணின் மூலப் பொருள்களிலிருந்து சிறிது எடுத்து பதினொன்றாக ஒரு பானை உருவாக்க முடியுமல்லவா? அதைப்போல ஆத்ம சாதனைகள் வழங்கப்பட்ட, சக்தி நிலையில் தயார் செய்யப்பட்டவர்களின் உச்சமான சக்திநிலையை ஒருங்கிணைத்து ஒரு மேம்பட்ட சக்தி நிலையை உருவாக்குதலே பிரதிஷ்டை.’
இந்தப் பிரதிஷ்டைக்குத்தான் எழுபது பேருக்குப் பயிற்சியளிக்கப்பட்டு, அவர்களில் 14 பேர் தேர்வு செய்யப்பட்டு.. பிறகு அவர்களையும் ஒரு நிலைக்குமேல் ஒருங்கிணைக்க இயலாமல் போய்... பிறகு சத்குரு, பாரதி, விஜி என்று மூன்றே பேர் போதும் என்று தீர்மானமாகி... அதிலும் விஜி திடீரென்று சமாதி அடைந்ததால், இருவர் மட்டும் பிரதிஷ்டையை மேற்கொள்ள வேண்டிவந்ததால்தான் நிறைய முன்னேற்பாடுகள் தேவைப்பட்டன.
தியானலிங்கத்துக்குப் பிராணப் பிரதிஷ்டை செய்வதென்பது, உச்சமான, மேம்பட்ட, சூட்சுமமான ஒரு சக்திநிலையை உருவாக்குவது மட்டுமல்ல, அந்த சக்திநிலையை நிலை நிறுத்திவைக்க அதன் சக்கரங்களைப் பூட்ட வேண்டும். அதே மூன்று வித பிராண சக்தியை ஒன்றாக இணைத்து ஒரு கயிறு போல, அதை வைத்து ஏழு சக்கரங்களும் பூட்டப்பட்டன. இவை எல்லாமே சூட்சும நிலையில் நிகழும் காரியங்கள். விஜி அவர்களின் இல்லாமையைச் சத்குருவே சமாளிக்க வேண்டியிருந்ததால், மிகவும் சிரமப்பட்டார். எந்த வினாடியும் உடலை சத்குரு துறந்துவிடும் வாய்ப்பு இருந்தது. அதை அவரும் எதிர்பார்த்திருந்தார். அவர் எதிர்பார்த்தது போலவே சக்திநிலையின் சுவாதிஷ்டான சக்கரத்தைப் பூட்டியபோது சத்குரு கீழே விழுந்தார்!
( வெளிச்சம் விரியும்...)