அவருக்கு பல காலமாக மிகவும் பிடித்தமான மலை அது. பல முறை போய் வருகிற மலையும் கூட. சாமுண்டி மலைதான் சத்குருவுக்கு அவர் ஒரு ஞான வித்தின் தொடர்ச்சி என்பதை நினைவூட்டியது, ஞானம் தந்தது, ஒரு புதிய ஆன்மீகப் பாதையில் அவரை வழி நடத்தியது.
குறிப்பிட்ட ஒரு நாள் தனிமையில் சத்குரு சாமுண்டி மலையின் ஒரு பாறையின் மேல் அமர்ந்திருந்த போது... திடீரென்று அவருக்குள் ஏதேதோ மாற்றங்கள்! பரவச நிலை! வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒரு பூரணத்துவமான உணர்வு நிலை! கண்களிலிருந்து அருவி போல கொட்டும் கண்ணீர்! ‘நான்’ என்பது என்ன என்கிற அர்த்தம் புரிந்த தருணம்! உடல் வேறு, உயிர் வேறு என்பதை உணர்ந்தபொழுது... மலை, செடி, பாறை, வானம், பறவை எல்லாமும், நானும் ஒன்று என்று உணரவைத்து ஞான வெடி வெடித்து... உடலெல்லாம், மனசெல்லாம் பரவசப் பூக்கள் ஒரே கணத்தில் பூத்த நிலை! அதுவே சத்குரு தன்னை உணர்ந்த சமயம்!
அவருடைய நினைவின் அனுபவத்தில் அந்தப் பரவச நிலையை ஒரு சில நிமிடங்களாக உணர்ந்திருக்கிறார். ஆனால் உண்மையில் ஏழு மணி நேரம் அந்த அனுபவம் அவருக்குள் நிகழ்ந்திருக்கிறது.
‘அது என்ன என்பதே முதலில் அவருக்குப் புரியவில்லை. எதற்காகவும் அழுதிராத என் கண்களில் ஏன் இத்தனை கண்ணீர்? எந்தக் கோயிலுக்கும் சென்றிராத எனக்குக் கிடைத்த இந்த அனுபவத்துக்கு என்ன பொருள்?’
சத்குருவைக் கேள்விகள் கொத்தின. அதே போன்ற பரவச தருணங்கள் அதன் பிறகு அவருக்கு வீட்டிலும் வெளியிலும் பலமுறை ஏற்படத் துவங்கியதும்... அவருக்குள் முன்னிரண்டு ஜென்மங்களின் ஏதேதோ தொடர்பற்ற நினைவுகளின் வெள்ளம் பெருக்கெடுத்து மனதில் ஓடத் துவங்க, கோழிப் பண்ணையோ, வேறு தொழிலோ செய்வதற்காக வழங்கப்படவில்லை இந்தப் பிறப்பு என்பதை முதலில் தெளிவாக உணர்ந்தார்!
தியானலிங்கம் அமைப்பதே இந்தப் பிறப்பின் லட்சியம் என்பதை உணர்ந்த சத்குரு உடனடியாக சில காரியங்களைச் செய்தார்!
( வெளிச்சம் விரியும்...)