தன்னுடைய வீட்டுக்குள் புகுந்து தன்னைக் கற்பழிக்க முயன்ற தீவிரவாதிகளுடன் போராடி, ஒரு தீவிரவாதியின் கையில் இருந்த துப்பாக்கியை பறித்து, அவனையே சுட்டுக் கொன்ற வீரப்பெண் ருக்சனாவுக்கு காஷ்மீர் மாநில அரசு, காவல்துறை அதிகாரி பதவியை வழங்கியுள்ளது.
நம் சாலைகளிலும், பேருந்துகளிலும் வேண்டுமென்றே இடிப்பவர்களைக் கூட தட்டிக் கேட்க பயந்து ஒளிந்து கொள்ளும் காலத்தில், ஒரு தீவிரவாதி என்று தெரிந்தும், தன்னைக் கற்பழிக்க வந்தவர்களை அடித்து உதைத்து, தீவிரவாத இயக்கத்தின் தளபதி ஒருவனையே தைரியமாக சுட்டுக் கொன்றுள்ளார் என்றால் அவரது துணிச்சலும், வீரத்திற்கும் வேறு சான்றுகள் வேண்டுமோ?இப்படி ஒரு பெண்ணிற்கு காவல்துறை பதவி அளிக்காமல் போனால் அதுதான் தவறு. காஷ்மீர் மாநிலம் ஜம்மு அருகே ரஜோரி என்ற இடத்தில் உள்ள கால்சியான் கிராமத்தில் ருக்சனா என்ற பெண் வசிக்கிறார். கடந்த செப்டம்பர் 27-ந் தேதி அன்று அவருடைய வீட்டுக்குள் லஷ்கர்-இ- தொய்பா இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதிகள் நுழைந்தனர். அவர்களை ருக்சனா, அவருடைய தம்பி அய்ஜாஸ், மாமா வகாலத் உசேன் ஆகியோர் தடுத்தனர்.எனினும், தீவிரவாதிகள் முன்னேறியதால் ஆத்திரம் அடைந்த ருக்சனா, ஒரு தீவிரவாதியின் கையில் இருந்த ஏ.கே.47 ரக துப்பாக்கியை பறித்து அவனை சுட்டுக் கொன்றார். மற்றொரு தீவிரவாதியையும் சுட்டார். அதில் அவனுக்கு காயம் ஏற்பட்டது. அதற்கு முன் துப்பாக்கியை உபயோகப்படுத்திய பழக்கமே இல்லாத ருக்சனாவின் வீரம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. முன்னதாக தீவிரவாதிகள் தாக்கியதில் அய்ஜாஸ் மற்றும் உசேன் ஆகியோர் காயமடைந்தனர்.இதற்கிடையே, வீரப்பெண் ருக்சனாவுக்கு நாடு முழுவதும் இருந்து வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளன. அதே நேரத்தில், தீவிரவாதிகளிடம் இருந்தும் அச்சுறுத்தல் எழுந்துள்ளது. எனவே, ருக்சனா வீட்டுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது. எனினும், ருக்சனா வீட்டில் கடந்த வெள்ளியன்று தீவிரவாதிகள் கையெறி குண்டுகளை வீசினர்.இந்த சூழ்நிலையில், ருக்சனாவின் வீரத்தை பாராட்டி அவருக்கு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு காவல்துறை அதிகாரி பதவி வழங்கப்பட்டுள்ளது. இந்த தகவலை, ரஜோரி பகுதியின் காவல்துறை சூப்பிரண்டு சவுகத் வட்டாலி நேற்று தெரிவித்தார். ருக்சனா தவிர, அவருடைய தம்பி அய்ஜாஸ் மற்றும் மாமா உசேன் ஆகியோருக்கும் காவல்துறையில் பதவி அளிக்கப்பட்டுள்ளது.
வீரத்திற்கும், இந்தியப் பெண் என்ற கெளரவத்திற்கும் பெருமை சேர்க்கும் வகையில் ருக்சனா நடந்து கொண்டுள்ளார். இவரைப் பின்பற்றி பெண்களே நாமும் நடை போடுவோம்.. அங்கே ஒரு சிலர் தீவிரவாதிகளாகத் திரிகின்றனர். ஆனால் இங்கே... எங்கு பார்த்தாலும் பல்வேறு ரூபங்களில் தீவிரவாதிகள் அலைந்து கொண்டுள்ளனர். நாம் நேர் கொண்ட பார்வையும், நிமிர்ந்த நன்னடையும் பயில்வோம் ருக்சனா வழியில்.