பெங்களூரில், சங்கிலியைப் பறித்துச் சென்ற பகுதி நேரமாக திருட்டுத் தொழிலில் ஈடுபடும் காவலரை துணிச்சலாகத் துரத்திப் பிடித்திருக்கிறார் ஓர் இளம் பெண். அந்த பெண்ணின் தைரியத்தைப் பாராட்டி, 5 ஆயிரம் ரூபாயை பரிசாக அளித்து கெளரவித்த காவல்துறை, அவருக்குத் தங்கள் துறையிலேயே வேலை கொடுக்கவும் முன்வந்திருக்கிறது.
webdunia photo
WD
பெங்களூர் நகரைச் சேர்ந்தவர் ஒய்.ஆர். பவ்யா. 22 வயதான இவர் எம்.ஏ. சமூகப் பணி பட்டப் படிப்பு பயின்று வருகிறார். அழகான இல்லத்தரசியும் கூட. சமீபத்தில் ஒருநாள் பவ்யா தனது கணவருடன் மாமியார் வீட்டில் இரவு உணவு சாப்பிட்டுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். கணவர் சற்று முன்னால் காரில் செல்ல, பவ்யா தனது இரு சக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து சென்று கொண்டிருந்தார்.
பவ்யா தெரு ஒன்றில் இடதுபுறமாகத் திரும்பியபோது தன்னை ஒரு நபர் மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வருவதைக் கவனித்தார். அவர் யாராக இருக்கும் என்று பார்ப்பதற்காக பவ்யா வாகனத்தை நிறுத்த, அந்த நபர் மின்னலாய் தன் பக்கம் வந்து கழுத்திலிருந்த தாலியையும், ஒரு சங்கிலியையும் பறித்து விட்டான். ஆனால் இரண்டும் அவனது கை நழுவி பவ்யாவின் காலிலேயே விழுந்துவிட்டன.
உடனடியாகச் சுதாரித்துக் கொண்ட பவ்யா, தாலியையும் சங்கிலியையும் தனது பைக்குள் போட்டுக்கொண்டு, நம் பொருள் கிடைத்ததே போதும் என்று தன் வழியைப் பார்த்துக் கொண்டு போகவில்லை. உடனடியாக சங்கிலித் திருடனைத் துரத்திச் சென்றார். அவன் தனது மோட்டார் சைக்கிளில் வேகமாகச் சென்ற போதும், பவ்யாவும் துரத்திச் சென்று ஒரு முட்டுச் சந்தில் திருடனை மடக்கிப் பிடித்தார். அத்துடன் திருடன் திருடன் என்று கூச்சலிட்டார். இதற்கிடையில் பவ்யாவின் கூச்சலால் திரண்ட அக்கம்பக்கத்தினர் திருடனைச் சூழ்ந்து தர்ம அடி கொடுத்தனர்.
குடிபோதையில் இருந்த அந்நபர், வலி பொறுக்காமல் தான் ஒரு காவலர் என்று கூறி தன்னை விட்டுவிடுமாறு கெஞ்சினார். பவ்யா அந்த நபரது அடையாள அட்டையை வாங்கிப் பார்த்து கூட்டத்தினரின் அடி, உதையைத் தடுத்து நிறுத்தினார்.
அதேநேரம் காரில் வீட்டை அடைந்திருந்த பவ்யாவின் கணவர் வாசு, பின்னால் மனைவியைக் காணாததால் குழப்பம் அடைந்து மனைவிக்கு செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அவர் நடந்த சம்பவத்தைச் சொல்ல, உடனே வாசு காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த காவலர்கள், பகுதி நேரமாய் சங்கிலிப் பறிப்புத் திருடனாய் அவதாரம் எடுத்திருந்த அந்த தலைமைக் காவலரை கைது செய்தது.
விஷயம் அத்துடன் முடிந்துவிடவில்லை. அடுத்த நாள் பவ்யாவுக்கு ஆச்சரியம் காத்திருந்தது. பவ்யாவின் வீர செயலை அறிந்து கொண்ட காவல்துறை ஆணையர், சங்கர் பிதாரி, பவ்யாவை சந்திக்க விரும்புவதாகத் தெரிவித்தார்.
அதன்படி காவல்துறை ஆணையரை சந்தித்த பவ்யாவுக்கு அவர் 5 ஆயிரம் ரூபாய் வழங்கிப் பாராட்டினார். இதுபோன்ற தைரியசாலிகள் தான் காவல்துறையில் இருக்க வேண்டும். நீங்கள் ஒப்புக்கொண்டால் காவல் துறையில் துணை ஆய்வாளராக பணியாற்ற வாய்ப்பளிக்கப்படும் என்று உறுதி அளித்திருக்கிறார்.
சங்கிலியைப் பறித்துச் சென்ற திருடனை துரத்திச் செல்லும் தைரியத்தைத் தந்தது எது என்று பவ்யாவிடம் கேட்டபோது, ``எனக்குத் திருமணமாகி ஐந்து மாதங்கள்தான் ஆகின்றன. தாலி மீது கை வைத்தால் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியுமா? அது என் உயிரல்லவா!'' என்று ஓர் இந்தியப் பெண்ணாய் கூறினார்.
வீரமும், மரபும் நிறைந்த நம் இந்தியப் பெண்ணுக்கு ஒரு சல்யூட்.