ஜார்கண்ட் மாநிலம் டாடா நகரில் இருந்து பீகார் மாநிலம் சாப்ராவுக்கு நேற்று முன்தினம் இரவு புறப்பட்ட விரைவு ரயிலில் போலோ நாத் என்பவர், தனது மனைவி ரிங்குவுடன் பயணம் செய்தார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ரிங்குவுக்கு நள்ளிரவில் திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. அவர் இருந்த பெட்டியில் நிறைய ஆண்கள் பயணிகள் இருந்ததால், கழிவறைக்கு சென்றார் ரிங்கு. சிறிது நேரத்தில் அவருக்கு சுகப்பிரசவத்தில் குழந்தை பிறந்தது. குழந்தையை கையில் எடுத்தபோது, குழந்தை கை தவறி கழிப்பறையில் இருந்த துவாரம் வழியாக விழுந்தது. தண்டவாளத்தின் நடுவே தவறி விழுந்ததைப் பார்த்ததும், கழிவறையில் இருந்து குழந்தை விழுந்துவிட்டதே என்று அலறியபடி ரிங்கு வெளியே ஓடிவந்தார்.
வெளியே நின்றிருந்த போலோ நாத் அபாய சங்கிலியை பிடித்து இழுக்கச் சென்றார். அப்போது, குழந்தையை காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் ஓடும் ரயிலில் இருந்து ரிங்கு குதித்துவிட்டார். இதற்கிடையே அபாய சங்கிலியை போலோநாத் இழுத்ததால் 2 கி.மீ. தூரம் சென்று ரயில் நின்றது. பயணிகள் இறங்கி ஓடிவந்து பார்த்தபோது, ரிங்குவும், குழந்தையும் காயத்துடன் கிடந்தனர். அவர்களை மீட்டு ரயிலுக்கு தூக்கி வந்தனர். அதற்குள் மேற்குவங்க மாநிலம் புரூலியா ரயில் நிலையத்திற்கு தகவல் சொல்லி ஆம்புலன்ஸ் வண்டி வரவழைக்கப்பட்டது. ரயில் நிலையம் வந்ததும் தயாராக இருந்த ஆம்புலன்ஸ் வேனில் ஏற்றி தாயையும், சேயையும் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு ரிங்குவுக்கும், குழந்தைக்கும் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த சிசுவும், குழந்தையை காப்பாற்ற பாய்ந்த தாயும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது உலக அதிசயங்களில் ஒன்றுதான் என்று மருத்துவர்கள் கூறினர். தடுக்கி விழுந்தே இறந்துவிடுபவர்கள் இருக்கிறார்கள். இந்த தாயையும், சேயையும் என்னவென்று சொல்வது, எமனைப் பார்த்துவிட்டு வந்தவர்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.