திருநங்கையர்களுக்கு தமிழக அரசு தக்க உரிமையும், பாதுகாப்பும் வழங்கி வந்தாலும், தனி நபர் அளவில் செய்யும் முயற்சிகளே அவர்களை மற்றவர்களுடன் சரிசமமாக வாழ வைக்க உதவுகிறது என்பதை உமா மகேஸ்வரியும், சமூக சேவகர் மெரோலின் சகாய ராணியும் நிரூபித்துள்ளனர்.
திருநங்கையர்களுக்கு அழகுக் கலை பயிற்சி அளித்து அவர்கள் வாழ்வில் சிறப்பு சேர்க்கவும், அவர்கள் வயிற்றுப்பாட்டிற்காக கீழ்நிலையான சில காரியங்களில் ஈடுபடுவதிலிருந்து தடுக்க விழிப்புணர்வு முகாமும் நடத்தப்படுகிறது.
மேற்கூறிய லட்சியத்தை நிறைவேற்ற 45 நாட்கள் அழகுக் கலை பயிற்சி முகாமைத் துவங்கி அதனை இன்று வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார்கள். இதில் சுமார் 17 திருநங்கையர்கள் வெற்றிகரமாக பயிற்சியை முடித்து சான்றிதழ் பெற்றனர். 17 திருநங்கையர்களுக்கும் நடிகர் விக்னேஷ் சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார்.
திருநங்கையர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சித் துவக்கமும் இன்று முடிவு செய்யப்பட்டது.
தனது இந்த முயற்சி குறித்து உமா மகேஸ்வரி கூறுகையில், முதலில் இவர்களைத் தேர்வு செய்து கவுன்சிலிங் என்ற மனோநிலைப் பயிற்சி வழங்கியதாகவும், அதன் பிறகு இவர்களின் திறமை தன்னை அதிசயிக்க வைத்ததாகவும் அந்த அடிப்படையில் இவர்களுக்கு முதல்கட்ட பயிற்சி அளித்து மற்றவர்களுடன் சரிசமமாக கௌரவத்துடன் வாழ இவர்களுக்கு விழிப்புணர்வு ஊட்டியதாகவும் தெரிவித்தார்.
தன்னுடைய சொந்த அழகு நிலைய பார்லரில் 17 திருநங்கையர்களுடன் மற்ற பெண்களுக்கும் சேர்த்தே பயிற்சி அளித்துள்ளார் உமா மகேஸ்வரி.
இந்த 17 பேரில் 4 திருநங்கையர்கள் தனியாக அழகுக் கலை தொழில் செய்ய ஏற்பாடு செய்து கொடித்திருப்பதாகவும், ஒருவருக்கு தன்னுடைய பார்லரிலேயே வேலை கொடுத்து முன்னோடியாகத் திகழ்ந்துள்ளார் உமா மகேஸ்வரி.
அவர் மேலும் கூறுகயில், மற்ற பெண்களைக்காட்டிலும் திருநங்கையர்களிடம் புத்தி கூர்மை அதிகம் இருப்பதாகவும், பாடங்களை உடனுக்குடன் புரிந்து கொண்டு சிறப்புற செய்து காட்டும் திறமையும் இவர்களிடம் அதிகம் இருப்பதையும் தன்னால் புரிந்து கொள்ள முடிந்தது என்றார்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற பயிற்சிபெற்ற திருநங்கையர்கள் பலரும் இந்த முயற்சி தங்கள் வாழ்வில் பெரும் திருப்பு முனையை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்தார்.