இன்று 9ஆம் தேதி, 9ஆம் மாதம், 2009ஆம் ஆண்டு. இப்படி 9 என்ற எண் சிறப்பு பெறும் இந்த நாளை புவி வெப்பமயமாதலைத் தடுக்கும் நாளாக நாம் ஏன் கடைபிடிக்கக் கூடாது. ஆம் கடைபிடிக்கலாமே என்று நீங்கள் நினைத்தால் இன்று இரவு 9 மணிக்கு உங்கள் வீட்டில் மின்சாரத்திற்கு வெறும் 9 நிமிடங்களாவது தடா சொல்லிப் பாருங்கள்.
09 09 09 என்ற சிறப்பு நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் வரும். அந்த சிறப்பை நாம் மேலும் சிறப்பாக்கலாம்.
என்னப் புரியவில்லையா... இது அன்னியன் பாஷையில் சொன்னால்தான் புரியும். அதாவது நாம் பயன்படுத்தப்படும் வாகனம் மற்றும் மின்சார சாதனங்களினால்தான் உலகின் வெப்ப நிலை அதிகரித்துக் கொண்டு வருகிறது. இதனைத் தவிர்க்க நாம் என்ன செய்வது.
வினை விதைத்தவன்தானே வினையை அறுக்க வேண்டும். முழுவதுமாக அல்லாமல் போனாலும் ஒரு பங்காவது இதைச் செய்யலாமே...
இன்று இரவு 9 மணிக்கு உங்கள் வீட்டில் மின்சாரத்தால் இயங்கும் அனைத்துப் பொருட்களுக்கும் 9 நிமிடங்கள் ஓய்வு கொடுங்கள். மின் விளக்கையும் சேர்த்து. உங்கள் வேலையை சீக்கிரம் முடித்துவிடுங்கள். அல்லது 9 மணி 10 நிமிடத்திற்குப் பிறகு செய்யுங்கள். அந்த நேரத்தில் மின்சாரத்தைப் பயன்படுத்தி செய்யும் எந்த வேலையையும் செய்யாதீர்கள.
என்னுடைய வீட்டில் மட்டும் விளக்கை அணைப்பதால் என்ன பயன் என்று கேட்கலாம். உங்கள் ஒரு வீட்டில் மட்டும் அல்ல, உங்களைப் போன்றவர்கள் ஒரு தெருவில் 4 பேர் விளக்கை அணைத்தால், இந்தியாவில் எத்தனை தெருக்கள் உள்ளன. இந்தியா மட்டும் அல்லாமல் உலக நாடுகள் பலவற்றிலும் இந்த நடைமுறை இருக்கிறது. இப்படி உலகம் முழுவதும் அந்த 9 நிமிடம் எவ்வளவு மின்சாரம் பயன்படுத்தப்படுவது தடை செய்யப்படுகிறது. எனவே இதனை ஒரு விளையாட்டாக எடுத்துக் கொண்டாலும் சரி, கடமையாக எடுத்துக் கொண்டாலும் சரி செய்து பாருங்கள்.
உங்கள் வீட்டின் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கும் இது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களையும் செய்யச் சொல்லுங்கள்.
இந்த நடைமுறையை சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை ஏற்றுக் கொண்டுள்ளது. அதன்படி, இன்று இரவு 9 மணிக்கு 9 நிமிடத்துக்கு விளக்குகளை அணைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மேயர் தெரிவித்தார்.
இந்த முயற்சியில் நாமும் பங்கேற்போம், உலகத்தையேக் காப்பாற்றும் பொறுப்பு இன்று உங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக எண்ணி இதனை நிறைவேற்றுவோம்.