குவைத் நாட்டுப் பெண்களுக்கு, உலக நாட்டுப் பெண்களுக்குக் கிடைக்கும் பல உரிமைகள் மறுக்கப்பட்டே உள்ளன. அதற்கு ஒரு வடிகாலாக, கடவுச் சீட்டுப் பெற வேண்டுமானால் ஒரு பெண் தனது பெற்றோர் அல்லது கணவனது அனுமதி பெற வேண்டும் என்று இருந்த சட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.
இது பெண்களின் சுதந்திரத்திற்குக் கிடைத்த மற்றொரு வெற்றியாகும்.
குவைத் நாட்டில் பெண்கள் கடவுச் சீட்டுப் பெற வேண்டுமானால், தங்களது பெற்றோர், கணவன் அல்லது பாதுகாவலர்கள் அனுமதி பெறவேண்டும். அவர்கள் அனுமதி இல்லாமல் பாஸ்போர்ட் பெறுவதற்கு மனுச்செய்ய முடியாது. இதற்கான உரிமைக்கு அந்த நாட்டு சட்டம் தடை விதித்து உள்ளது. இந்த நிலையில் அரசியல் சட்ட நிர்ணய நீதிமன்றம், கணவர் பெற்றோர் அனுமதி இல்லாமல் பெண்கள் கடவுச் சீட்டுப் பெறலாம் என்று உத்தரவில் கூறியுள்ளது.
பெண் உரிமைக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக இது கருதப்படுகிறது. குவைத் நாட்டு பெண்களுக்கு ஏற்கனவே ஓட்டு உரிமையும் தேர்தலில் போட்டியிடுவதற்கு உரிமையும் இருக்கிறது. ஆனால் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் வளைகுடா நாட்டு பெண்களுக்கு குறைவான உரிமைகளே இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
சவுதி அரேபியாவில் ஓட்டுநர் உரிமம் பெற மனுச்செய்வதற்கு கூட பெண்கள் உரிமை இல்லாமல் இருக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ளவும்.