கணவனை காரணமின்றி பிரிந்தால் ஜீவனாம்சம் இல்லை
, வெள்ளி, 20 நவம்பர் 2009 (11:46 IST)
எந்த அடிப்படையான காரணமும் இன்றி, கணவனை விட்டுப் பிரிந்து வாழும் பெண்ணுக்கு ஜீவனாம்சம் கோர உரிமை இல்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த மகேந்திரகுமார் - பூனம் தம்பதிக்கு கடந்த 1992ஆம் ஆண்டு திருமனம் நடைபெற்றது. இவர்களது 6 ஆண்டு திருமண வாழ்க்கையில் 2 குழந்தைகளும் பிறந்தன.இந்த நிலையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், 1998ஆம ஆண்டு பூனம் தனது கணவனையும், குழந்தைகளையும் விட்டுவிட்டு தாய் வீட்டிற்குச் சென்றுவிட்டார்.இதையடுத்து கணவன் மற்றும் குடும்பத்தார் மீது வரதட்சணை புகார் கூறி வழக்குத் தொடர்ந்தார். ஆனால் வழக்கு விசாரைணயில், தன்னைக் கொடுமைப்படுத்தியதற்கான எந்த ஆதாரத்தையும் பூனத்தால் வழங்க முடியவில்லை. இதனால் இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. அப்போதும் பூனம் தாய் வீட்டில் தான் வாழ்ந்து வந்தார்.
பின்னர் 2 ஆண்டுகள் கழித்து பூனம் தரப்பில் குடும்ப நல நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், கடந்த 2 ஆண்டுகளாக நான் தனியாக வாழ்கிறேன். எனவே அந்த அடிப்படையில் எனக்கு விவாகரத்து வழங்க வேண்டும். மாதம் 4 ஆயிரம் ரூபாய் ஜீவனாம்சம் வழங்க உத்தரவிட வேண்டும்ட என்று கூறியிருந்தார்.இந்த வழக்கை விசாரித்த குடும்ப நல நீதிமன்றம், பூனத்துக்கு விவாகரத்து வழங்கியது. ஆனால் ஜீவனாம்சம் வழங்க உத்தரவிட முடியாது என்று தெரிவித்தது.எந்த அடிப்படைக் காரணமும் இன்றி கணவனை கைவிடும் பெண்ணுக்கு ஜீவனாம்சம் கோர உரிமையில்லை என பஞ்சாப் உயர் நீதிமன்றம் தெரிவித்தது. இதையடுத்து பூனம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், பஞ்சாப் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உறுதி செய்தனர்.மேலும், தங்களது தீர்ப்பில், புகுந்த வீட்டை விட்டு தானாக வெளியேறிவிட்டு ஜீவனாம்சம் கேட்கிறீர்களே... இதுதான் இந்த நாட்டின் சட்டமா? கணவனை கைவிட்டு தனியாக வாழ்வதில் ஏதேனும் நியாயம் இருக்கிறதா?. தாங்களாகவே எந்த காரணமும் இன்றி கணவனை கைவிடும் பெண்ணிற்கு ஜீவனாம்சம் கோர எந்த உரிமையும் இல்லை என்று நீதிபதிகள் காட்டமாகக் கூறியுள்ளனர்.