சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவரும் அதிமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை நாங்கள் சென்று சந்திக்க மாட்டோம் என அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.
தேர்தல் கமிஷனால் முடக்கி வைக்கப்பட்டிருக்கும் இரட்டை இலை சின்னத்தை பெற பேரம் பேசிய புகாரில் கைது செய்யப்பட்டு, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு டெல்லி நீதிமன்றம் நேற்று ஜாமீன் வழங்கியது. இதையடுத்து சிறையில் இருந்து இன்று வெளியே வருகிறார் தினகரன்.
இந்நிலையில், அதிமுக அம்மா அணியை சேர்ந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டவர்கள் தினகரனை சந்திப்பார்களா இல்லையா என்ற சந்தேகம் எழுந்தது. ஏனெனில், இரட்டை இலை சின்ன விவகாரத்திற்கு முன் தினகரனை தலைமையாக ஏற்றுக்கொண்டே அவர்கள் செயல்பட்டு வந்தனர். ஆனால், சசிகலா குடும்பத்தினரை ஒதுக்கி வைத்தால் மட்டுமே பேச்சு வார்த்தைக்கு ஒத்துழைப்போம் என ஓபிஎஸ் அணி கூறிவிட்டதால், அதற்கு எடப்பாடி அணி ஏற்றுக்கொண்டது.
ஆனால், சசிகலா மற்றும் தினகரன் ஆகியோரிடம் ராஜினாமா கடிதத்தை பெற்றால் மட்டுமே ஏற்றுக்கொள்வோம் என ஓபிஎஸ் அணி கூறியது. ஆனால், அதற்கு எடப்பாடி அணி சம்மதம் தெரிவிக்கவில்லை. எனவே இரு அணிகளுக்கும் இடையே இதுவரை பேச்சுவார்த்தை நடைபெறாமல் இருக்கிறது. இந்நிலையில்தான் தினகரன் சிறையிலிருந்து வெளியே வருகிறார். எனவே, அதிமுக அம்மா அணியை சேர்ந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஜெயக்குமார் உள்ளிட்டவர்கள் தினகரனை சந்திக்க வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டது.
இந்நிலையில் இதுபற்றி செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமார் “ ஜாமீனில் விடுதலை ஆகியுள்ள தினகரனை நாங்கள் சந்திக்க மாட்டோம் என்கிற நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. எடப்படி பழனிச்சாமி தலைமையில்தான் இந்த அரசும் ஆட்சி எந்திரமும் செயல்படும்’ என தெரிவித்துள்ளார்.
இது தினகரனின் ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.