ஊடகங்கள் மீது அவதூறு வழக்குகளை தொடுப்பதன் மூலம், முதல்வரின் நடவடிக்கைகளில் எந்த மாற்றமும் நிகழவில்லை என்பதை உறுதிப்படுத்துகிறது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.
கடந்த மே மாதம் 23ஆம் தேதி கண்டெய்னர் பணம், மறைக்கப்படும் உண்மை, அம்பலப்படுத்தும் ஆதாரம் என்ற தலைப்பில் வெளியான கட்டுரைக்காக முதலமைச்சர் ஜெயலலிதா சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்நிலையில், சிதம்பரத்தில் செய்தியாளரகளை சந்தித்த திருமாவளவன், ”நக்கீரன் ஏட்டின் மீது அவதூறு வழக்கு தொடுத்திருக்கிறார் முதல்வர். இந்திய வரலாற்றிலேயே ஊடகங்கள் மீது தொடர்ந்து அவதூறு வழக்குகளை தொடுத்த சாதனையை தமிழக முதல்வர் அவர்கள் தான் செய்திருக்கிறார்.
அரசியல் கட்சித் தலைவர்கள் மீது ஒருபுறம். ஆனால் ஊடங்கள் மீது இந்த அளவுக்கு எந்த மாநிலத்திலும் அவதூறு வழக்குகளை தொடுக்கப்பட்டதாக அறியவில்லை.
ஆகவே ஊடகங்கள் மீது அவதூறு வழக்குகளை தொடுப்பது, அதுவும் தற்போது முதல்வராக பொறுப்பேற்றவுடன் இந்த தாக்குதலை நடத்துவது முதல்வரின் நடவடிக்கைகளில் எந்த மாற்றமும் நிகழவில்லை என்பதை உறுதிப்படுத்துகிறது” என்று கூறியுள்ளார்.