தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அப்பல்லோ மருத்துவமனையில் பார்க்க எனக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது என்று ஆளுநர் வித்யாசாகர் ராவ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம் 22ஆம் தேதி உடல்நலம் குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்று வரை அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனால் முதல்வர் ஜெயலலிதாவின் இலாகாக்கள் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஆளுநர் வித்யாசாகர் ராவ் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அறிக்கை அனுப்பியுள்ளார்.
அறிக்கையில், முதல்வர் ஜெயலலிதா அவர்களிடமிருந்த காவல்துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளும், கடந்த செவ்வாய்க்கிழமை முதல், நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு மாற்றப்பட்டது. அமைச்சரவை கூட்டங்களுக்கும் ஓ.பன்னீர்செல்வம் தலைமை வகிப்பார்.
அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றபோது ஜெயலலிதாவை பார்க்க வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால், அவரது உடல்நிலை கருதி அவர் சிகிச்சை பெறும் அறைக்குச் சென்று பார்க்காமல் திரும்பிவிட்டேன், என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஜெயலலிதா உடல்நிலை குறித்த எந்த தகவலும் அந்த அறிக்கையில் ஆளுநர் குறிப்பிடவில்லை.