Publish Date: Mon, 28 Dec 2015 (15:30 IST)
Updated Date: Mon, 28 Dec 2015 (15:58 IST)
நாமக்கல் மாவட்டம், திருச் செங்கோட்டில் டிஎஸ்பியாக பணிபுரிந்துவந்த விஷ்ணுபிரியா, 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் 18 ஆம் தேதி தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார்.
நாமக்கல் மாவட்டம், திருச் செங்கோட்டில் டிஎஸ்பியாக பணிபுரிந்துவந்தவர் விஷ்ணுபிரியா. இவர் தங்கியிருந்த வீட்டில் 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் 18 ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.
ஆனால், கல்லூரி மாணவரும் தலித் இளைஞருமான கோகுல்ராஜ் கொலை வழக்கை விஷ்ணுபிரியா விசாரித்ததால், உயரதிகாரிகளின் நெருக்கடி காரணமாகவே அவர் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கோகுல்ராஜ் கொலை வழக்கு தொடர்பாக காவல்துறை உயர் அதிகாரிகள் அழுத்தம் கொடுத்ததால்தான் விஷ்ணுபிரியா உயிரிழந்தார் என்று அவரது தோழி கூறினார்.
விஷ்ணுபிரியாவின் உடல் அவரது சொந்த ஊரான கடலூரை அடுத்த கோண்டூருக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அடக்கம் செய்யப்பட்டது.
விஷ்ணுபிரியா மரணம் குறித்து சிபிஐ விசாரிக்க உத்தர விட வேண்டும் என்றும் அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் விஷ்ணுபிரியாவின் தந்தை ரவி மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அந்த வழக்கு சிபிசிஐடி விசாரணை நடத்த தமிழக அரசு உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தர விடக் கோரி சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா ஆகியோர் அடங்கிய அமர்வு தள்ளுபடி செய்தது.
Suresh
Publish Date: Mon, 28 Dec 2015 (15:30 IST)
Updated Date: Mon, 28 Dec 2015 (15:58 IST)