குடிநீர் குழாய்கள் அமைப்பதற்காக தோண்டப்பட்ட குழிகள் - தவிக்கும் வாகனங்கள்
கோவை இடையார்பாளையம் அருகே குடிநீர் குழாய்கள் அமைப்பதற்காக தோண்டப்பட்ட குழிகள் முறையாக மூடப்படாததால் வாகனங்கள் பள்ளத்தில் சிக்கும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது.
கோவை மாநகராட்சிக்குட்பட்ட தடாகம் சாலை இடையர்பாளையம் பகுதியில் தற்போது குடிநீர் குழாய்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
தற்போது கே என் ஜி புதூர் முதல் கோவில்மேடு வரை பிரதான சாலையான தடாகம் சாலையில் சுமார் 10 அடி ஆழத்திற்கு குழிகள் தோண்டப்பட்டு குழாய்கள் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதன் காரணமாக ஏற்கனவே சேதமடைந்து இருந்த சாலை தற்போது பயணிக்கவே முடியாத அளவிற்கு கடுமையாக சேதம் அடைந்துள்ளது.
கே என் ஜி புதூர் முதல் இடையர்பாளையம் வரை குழாய் பதிக்கும் பணிகள் நிறைவு பெற்றுள்ள போதும் தண்ணீர் விடும் சோதனைக்காக தற்காலிகமாக மட்டுமே குழிகள் மூடப்பட்டுள்ளன.
கோவை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் கனமழை காலங்களின் போது இந்த சாலையில் நடுவே தோண்டப்பட்டுள்ள குழிகளில் திடீரென மண் சரிவு ஏற்பட்டு வருகிறது.
இதனால் குண்டும் குழியுமாக காட்சியளிக்கும் சாலையில் கனரக வாகனங்கள் பயணிக்கும் போது அவ்வப்போது குழிக்குள் சிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தனியார் பேருந்து ஒன்று சாலை பள்ளத்தில் புதைந்த நிலையில் நேற்று இரவு இரும்பு லோடு ஏற்றி வந்த டெம்போ ஒன்று பேருந்து சிக்கிய அதே இடத்தில் பின் சக்கரம் குழிக்க்குள் அமிழ்ந்து சிக்கியது.
இதனால் அவ்வழியே சென்ற கார்கள் மற்றும் இரு சக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.
நீண்ட நேரத்திற்கு பிறகு வேறு வாகனம் வரவழைக்கப்பட்டு டெம்போ வாகனம் மீட்கப்பட்டது.
வாகனங்கள் அடிக்கடி குழிக்குள் சிக்குவது தொடர்கதை ஆகி வரும் நிலையில் சாலையை சீரமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாகனம் குழிக்குள் சிக்கிய பகுதியின் அருகிலேயே தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது.
மேலும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த சாலையில் பயணித்து வருவது குறிப்பிடத்தக்கது.