ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஈரானில் வசிக்கும் இந்தியர்களுக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அவசர கால எச்சரிக்கையை விடுத்துள்ளது. ஈரானில் தற்போது நிலவி வரும் கடுமையான உள்நாட்டுப் போராட்டங்கள் மற்றும் ஈரானிய அரசுக்கு எதிராக அமெரிக்கா முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ள நேரடித் தாக்குதல் அபாயம் காரணமாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி, ஈரானில் உள்ள இந்திய மாணவர்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் தொழில் நிமித்தமாக சென்றவர்கள் உடனடியாக இந்தியா திரும்புமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளனர். மேலும், தவிர்க்க முடியாத காரணங்கள் இருந்தாலன்றி இந்தியர்கள் யாரும் ஈரானுக்கு பயணம் செய்ய வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தற்போது ஈரானில் சுமார் 10,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் வசித்து வருகின்றனர். அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இந்தியத் தூதரகம் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
ஈரான் மக்களின் போராட்டத்திற்கு அமெரிக்கா வெளிப்படையான ஆதரவை வழங்கி வருவதால், எந்த நேரத்திலும் ராணுவ தாக்குதல் நிகழலாம் என்ற அச்சம் நிலவுகிறது. இதனால், அங்குள்ள இந்தியர்கள் தூதரகத்தின் தொடர்பில் இருக்குமாறும், பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர தயாராக இருக்குமாறும் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.