ஷாங்காய் தரவரிசை நிறுவனம் வெளியிட்டுள்ள 2025-ஆம் ஆண்டிற்கான உலகப் பல்கலைக்கழகங்களின் கல்வித் தரவரிசையில் முதல் 500 இடங்களுக்குள் ஒரு இந்தியக் கல்வி நிறுவனம் கூட இடம்பெறாதது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
இந்தியாவின் முதன்மை ஆராய்ச்சி நிறுவனமான பெங்களூரு இந்திய அறிவியல் கழகம் , 501-600 என்ற தரவரிசைப் பட்டியலுக்குத் தள்ளப்பட்டுள்ளது. இது குறித்துக் கருத்து தெரிவித்துள்ள பிரசாந்த் பூஷண் போன்ற விமர்சகர்கள், இந்தியாவின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு செலவினம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெறும் 0.7% ஆக இருப்பதையே முக்கியக் காரணமாகச் சுட்டிக்காட்டுகின்றனர்.
மறுபுறம், 2026-ஆம் ஆண்டிற்கான க்யூ.எஸ் தரவரிசையில் ஐஐடி டெல்லி 123-வது இடத்தை பிடித்துள்ளதையும், முதல் 500 இடங்களுக்குள் 12 இந்திய நிறுவனங்கள் இருப்பதையும் ஆதரவாளர்கள் முன்வைக்கின்றனர்.
ARWU தரவரிசை என்பது நோபல் பரிசு மற்றும் அதிக ஆராய்ச்சி கட்டுரைகளை அடிப்படையாகக் கொண்டது; ஆனால் க்யூ.எஸ் தரவரிசை வேலைவாய்ப்பு மற்றும் நற்பெயருக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. உலக அளவில் அமெரிக்கா மற்றும் சீனாவுடன் போட்டியிட வேண்டுமானால், உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சியில் இந்தியா இன்னும் கூடுதல் முதலீடுகளை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.