கடந்த வாரத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் கமலஹாசனின் ராஜகமல் பிலிம்ஸ் தயாரிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் ஒரு படம் உருவாகவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. இது அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. ஏனென்றால் ரஜினிகாந்த் சமீபகாலமாக இளம் இயக்குனர்களின் படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார்.
ஏற்கனவே சுந்தர் சி , ரஜினியை வைத்து அருணாசலம் என்ற ஹிட் படத்தைக் கொடுத்துள்ளார். இதனால் ஒரு ஜாலியான படமாக இந்த படம் அமையும் என ரஜினி ரசிகர்கள் ஆர்வத்தோடு காத்திருக்கின்றனர். இந்நிலையில் இந்த படத்தில் இருந்து விலகுவதாக சுந்தர் சி இப்போது அறிவித்துள்ளார்.
இது சம்மந்தமாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் “கனத்த இதயத்துடன் தலைவர் 173 படத்தில் இருந்து விலகும் முடிவை எடுத்துள்ளேன். ரஜினி, கமல் ஆகிய இரு ஜாம்பவான்களிடம் இருந்து நான் விலைமதிப்பில்லாத பாடங்களைக் கற்றுள்ளேன். அவர்கள் இருவருக்கும் நான் இதயத்தின் அடியாழத்தில் இருந்து நன்றி தெரிவிக்கிறேன்” எனக் கூறியுள்ளார். இந்த அறிவிப்பு தமிழ் சினிமா வட்டாரத்தில் பரபரப்பையும் புதிர்த்தன்மையையும் உருவாக்கியுள்ளது.