தமிழ் சினிமாவில் நடன அமைப்பாளராக இருந்து, ஹீரோவாக பல படங்களில் நடித்த பின்னர் போக்கிரி படம் மூலம் வெற்றிகரமான இயக்குநராக வலம் வந்தவர் பிரபுதேவா. இவர் பாலிவுட் சென்று அங்கும் வெற்றிகரமான இயக்குநராக வலம் வந்தார். ஆனால், அவரது சமீபத்தைய படங்கள் எதுவும் வெற்றிபெறவில்லை. அதனால் தற்போது மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில் வெற்றிக் கூட்டணியாக அறியப்பட்ட பிரபுதேவா மற்றும் வடிவேலு ஆகியோர் மீண்டும் இணைந்து ஒரு படத்தில் நடிக்கவுள்ளனர். இந்த படத்தை சாம் ரோட்ரிக்யூஸ் இயக்குகிறார். துபாயைச் சேர்ந்த தமிழ் தொழிலதிபர் கண்ணன் ரவி தயாரிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார் என அறிவிக்கப்பட்டது.
ஆனால் பூஜையோடு இந்த படம் கைவிடப்பட்டதாக சொல்லப்பட்டது. ஆனால் இப்போது படத்தின் பொஸ்டர் வெளியாகியுள்ளது. அந்த போஸ்டரில் “அவனுக்கு ஐந்தாக இருந்த போது எனக்கு ஆறு வயது” என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. மேலும் படத்தின் போஸ்டரை வைத்துப் பார்க்கும்போது நகைச்சுவை பேய்ப் படமாக இருக்கும் எனத் தெரிகிறது.