அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குனர் சந்தீப் ரெட்டி வாங்கா, ரன்பீர் கபூரைக் கதாநாயகனாக வைத்து இயக்கிய அனிமல் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அனிமல் படம் ஆணாதிக்கக் கருத்துகள் விதந்தோதுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆனாலும் இந்த படம் 900 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்தது.
அவர் இயக்கிய அர்ஜுன் ரெட்டி படத்தின் மீதும் இந்த விமர்சனம் எழுந்தது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் அவர் படங்கள் வணிக ரீதியாக வெற்றி பெறுவதால் அவர் இயக்கத்தில் நடிக்க முன்னணி கதாநாயகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். அடுத்து அவர் பிரபாஸின் 25 ஆவது படமான ஸ்பிரிட் என்ற படத்தை இயக்க உள்ளார். இந்த படம் ஒரு காவல்துறை அதிகாரியைப் பற்றிய கதை என சொல்லப்படுகிறது.
நவம்பரில் ஷூட்டிங் தொடங்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் மடோனா செபாஸ்டியன் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே சிரஞ்சீவி உள்ளிட்டவர்கள் சிறப்புத் தோற்றத்தில் இந்த படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது.