தெலுங்கு இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் உள்ளிட்ட பலர் நடித்து வெளியான படம் கல்கி 2898 ஏடி. மகாபாரத குருச்சேத்திர போரையும், அதற்கு பிறகு 6 ஆயிரம் ஆண்டுகள் கழித்து நடக்கும் கல்கியின் வருகையையும் இணைத்து உருவாக்கப்பட்ட இந்த படம் பெரும் ஹிட் அடித்து 1100 கோடி வசூலித்தது.
இந்த படத்தின் மையக் கதாபாத்திரம் ஒன்றில் தீபிகா படுகோன் நடித்திருந்தார். இரண்டாம் பாகத்திலும் அவருக்கு முக்கிய வேடம் உள்ளதாக இயக்குனர் நாக் அஸ்வின் தெரிவித்திருந்தார். இந்நிலையில் நேற்று திடீரென இரண்டாம் பாகத்தில் இருந்து தீபிகா நீக்கப்படுவதாக தயாரிப்பாளர் தரப்பு அறிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில் இரண்டாம் பாகத்துக்கான படப்பிடிப்பை அடுத்த மாதம் முதல் தொடங்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. முதல் பாகத்தில் சில நிமிடங்களே தோன்றிய கமல் கதாபாத்திரம் இரண்டாம் பாகத்தில் சுமார் 90 நிமிடங்கள் வரை திரையில் தோன்றவுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் அடுத்த மாதம் கமல், கல்கி இரண்டாம் பாக ஷூட்டிங்கில் கலந்துகொள்ள உள்ளதாக சொல்லப்படுகிறது. பிரபாஸ் அடுத்த ஆண்டு ஷூட்டிங்கில் கலந்துகொள்வார் என சொல்லப்படுகிறது.