தனுஷ் தனது நான்காவது படமாக (இயக்குனராக) இட்லி கடை படத்தை உருவாக்கியுள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் தேனி உள்ளிட்ட தனுஷின் சொந்த ஊர்ப் பகுதிகளில் தொடங்கி நடந்தது. படத்தை டான் பிக்சர் தயாரிக்க, ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார். ஒளிப்பதிவாளராக கிரண் கௌஷிக் பணியாற்றுகிறார்.
தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் ஆகாஷ் பாஸ்கரனின் டான் பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இந்த படம் அக்டோபர் 1 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. இதையடுத்து நேற்று படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடந்தது.
வழக்கமாக தனது படங்களின் இசை வெளியீட்டு விழாக்களில் உணர்ச்சிப்பூர்வமாக எதையாவது பேசி ஆதரவையும் விமர்சனங்களையும் பெற்று வருகிறார் தனுஷ். அந்த வகையில் நேற்று பேசியதும் கவனம் ஈர்த்துள்ளது. அதில் “இட்லி கடை என்ற பெயருக்குப் பின்னால் காரணம் இருக்கிறது. அது ஒரு முக்கியமானக் கேரக்டர். சின்னவயதில் எங்கள் ஊரில் ஒரு இட்லி கடை இருக்கும். அதில் எப்படியாவது இட்லி சாப்பிடவேண்டும் என்பதுதான் எனது ஆசை. ஆனால் அதற்குக் காசு இருக்காது.
அதனால் ஞாயிற்றுக் கிழமைகளில் குளத்தில் இறங்கி பூப்பறித்துக் கொடுத்து, அவர்கள் கொடுக்கும் இரண்டு ரூபாயில் நானும் என் அக்காக்கள் இருவரும் சாப்பிடுவோம். அந்த ருசி, பைவ் ஸ்டார் ஹோட்டல்களில் சாப்பிட்டாலும் வராது” எனப் பேசியுள்ளார்.