தமிழக கோயில்களில் நடந்த சிலை திருட்டுகள் மற்றும் அது தொடர்பான விசாரணை ஆவணங்களை கையாண்டதில் நடந்த முறைகேடுகள் குறித்து உச்ச நீதிமன்றம் இன்று தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
வழக்கறிஞர் யானை ஜி. இராஜேந்திரன் தாக்கல் செய்த மனுவில், சிலை திருட்டு தொடர்பான முக்கியமான வழக்கு கோப்புகள் "காணாமல் போய்விட்டன அல்லது எரிக்கப்பட்டுவிட்டன" என்று குற்றம் சாட்டினார்.
இந்த விவகாரம் குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு மத்திய உள்துறை அமைச்சகத்திற்கும் மற்றும் தமிழக உள்துறைக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட சிலைகளை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பதிலளிக்க வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
முன்னதாக, 376 திருட்டு சிலைகள் தொடர்பான 41 கோப்புகள் காணாமல் போனது குறித்து நீதிமன்றம் தமிழக அரசை சாடியது குறிப்பிடத்தக்கது. கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாக்கும் கடமை அரசிடம் உள்ளது என்றும் நீதிமன்றம் வலியுறுத்தியது.