நடிகர் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து சுதாகொங்கரா இயக்கியுள்ள பராசக்தி திரைப்படம் இன்று காலை தமிழகமெங்கும் வெளியானது. 400 தியேட்டர்களில் பராசக்தி படம் வெளியாகும் என சொல்லப்பட்டு ஜனநாயகன் படம் வெளியாகாத நிலையில் 600க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் பராசக்தி படம் இன்று காலை 9 மணிக்கு தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் வெளியாகியிருக்கிறது.
இந்த படத்தை 1960களில் தமிழகத்தில் நடந்த ஹிந்தி எதிர்ப்பு போராட்டங்களை மையப்படுத்தி உருவாக்கியிருக்கிறார்கள். இந்தி எதிர்ப்பு போராட்டத்தை ஒடுக்க மத்திய அரசு என்னென்ன முயற்சிகள் நடந்தது?.. திராவிட முன்னேற்ற கழகம் எவ்வளவு தீவிரமாக இந்தி திணிப்பை எதிர்த்தது என்பது உள்ளிட்ட பல காட்சிகளும் படத்தில் இடம் பெற்றிருக்கிறது.
எனவே ஹிந்தி எதிர்ப்பு மற்றும் மத்திய அரசை எதிர்த்து படத்தில் பல வசனங்களும் இடம் பெற்றுள்ளது. அதனால், தணிக்கை அதிகாரிகள் பல வசனங்களையும் மாற்றியும், நீக்கியும் விட்டனர். சில காட்சிகளும் நீக்கப்பட்டிருக்கிறது. அதன்பின் படத்திற்கு தணிக்கை அதிகாரிகள் U/A 16+ சான்றிதழ் கொடுத்திருக்கிறார்கள்.
இந்நிலையில், இந்த படத்தை வைத்து சாலை விதிகளுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியில் தமிழக காவல்துறை இறங்கியிருக்கிறது.. தஞ்சாவூரில் ஹெல்மெட் அணிந்து வந்த பலருக்கும் காவல்துறை அதிகாரிகள் பராசக்தி திரைப்படத்தின் சினிமா டிக்கெட் கொடுத்திருக்கிறார்கள். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.