தமிழக அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தற்போது 55 சதவீதமாக உள்ள அகவிலைப்படியை 58 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த அகவிலைப்படி உயர்வு ஜூலை 1 ஆம் தேதி முதல் முன்தேதியிட்டு வழங்கப்படும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியாகியுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டு மக்களின் நலனில் அன்பும் அக்கறையும் கொண்டு பல சீரிய முன்னோடி நலத் திட்டங்களை தீட்டி தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகின்றது. மக்களுக்காக வகுக்கப்படும் பல்வேறு நல திட்டங்களை தீட்டுவதிலும், அத்திட்டங்களை முழுமையாக மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் களப்பணியாற்றுவதிலும் முக்கிய பங்கு வகிப்பவர்கள் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள்.
அத்தகைய அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனை இவ்வரசு கருத்தில் கொண்டு, மாநில அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன்பெறும் வகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 01.07.2025 முதல் மாநில அரசுப் பணியாளர்களுக்கும் மத்திய அரசு அறிவித்துள்ள அகவிலைப்படிக்கு இணையாக உயர்த்தி வழங்கிட ஆணையிட்டுள்ளார்.
உயர்த்தப்பட்ட அகவிலைப்படி விவரம்
தற்போதைய அகவிலைப்படி: 55 சதவீதம்
உயர்வு சதவீதம்: 3 சதவீதம்
புதிய அகவிலைப்படி: 58 சதவீதம் (01.07.2025 முதல்)
இந்த அகவிலைப்படி உயர்வால், சுமார் 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள். இதனால் ஆண்டு ஒன்றுக்கு அரசுக்கு ரூ. 1,829 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும்.
அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் நலன் கருதி இதற்கான கூடுதல் நிதியை அரசு ஒதுக்கீடு செய்யும். இவ்வாறு தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.