ஜெயலலிதாவின் கூட்டத்துக்கு ஒரு முறை போனால் 200 ரூபாய் என்றும் ஒரேடியா போனால் 20 லட்ச ரூபாய் என்றும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
மதுரை வடக்கு தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சாராள் என்பவரை ஆதரித்து சீமான் பேசுகையில், ”விவசாயம் செய்வதை கேவலம் என்று நினைக்கின்றனர் நமது மக்கள். ஆனால், அதுதான் நம்மை காப்பாற்றுகிறது என்று அவர்களுக்கு தெரியவில்லை.
வயலில் சென்று வேலை செய்ய பயப்படும் நாம், நாளை சோற்றிற்காக பயபடபோறோம். இன்று இலவசமாக போடும் இவர்கள் நாளை கண்டிப்பாக காப்பாற்ற மாட்டார்கள். கஜானா காலியானதும் ஓடிவிடுவார்கள்.
ஒரு குண்டூசி செய்பவன் கூட தன் பொருளுக்கு தானே விலையை நிர்ணயம் செய்கிறான். ஆனால் வருடம் முழுவதும் உழைத்து ஓடாய் தேய்ந்த விவசாயி விளைய வைத்த பொருளுக்கு யாரோ விலையை நிர்ணயம் செய்கிறான். மிகவும் கொடுமையான விஷயம்.
ஜெயலலிதா கூட்டத்துக்கு போனவரிடம் கேட்டேன். எப்படி இருந்தது என்று. ஒரு முறை போனால் 200 ரூபாய். ஒரேடியா போனால் 20 லட்ச ரூபாய் என்றார்.
படி படியா மது விலக்கு கொண்டுவர போறாங்களா. மாடில எதுவும் போய் கடைவைத்திருப்பாங்க போல, ஆனால், மதுவிற்கு அஸ்திவாரம் போட்டது கருணாநிதி தான். அந்த கள்ளச்சாவி திறந்ததுதான் டாஸ்மாக்” என்று கூறியுள்ளார்.