வலுவிழந்த 'டிட்வா' புயல் சின்னம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் வடதமிழக - புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் நிலைகொண்டுள்ளது. இது தற்போது சென்னைக்கு தெற்கு - தென்கிழக்கே சுமார் 50 கி.மீ. தொலைவில் உள்ளது.
இந்த புயல் சின்னம் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. புயல் வலுவிழந்தபோதும், மழையின் தீவிரம் இன்று காலை முதல் அதிகரித்துள்ளது.
'தமிழ்நாடு வெதர்மேன்' பிரதீப் ஜான் அவர்களின் கணிப்பின்படி, வலுவிழந்த இந்த டிட்வா சின்னத்தால், சென்னைக்கு தேவையான மழை அடுத்த இரண்டு நாள்களுக்குக் கிடைக்கும். இந்த காற்றழுத்த பகுதி புதன்கிழமை வரை சென்னை கடற்கரை அருகே நிலைகொண்டிருக்கும். நாளை பல இடங்களில் மழை அளவு 100 மி.மீ.யைத் தாண்டக்கூடும்.
இதன் காரணமாக, டெல்டா மாவட்டங்கள், கோவை, மதுரை உட்பட பல உள் மாவட்டங்களிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.