நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை துவங்கி விக்கிரவாண்டியில் நடந்த முதல் மாநாட்டில் பேசிய போது எங்களுடன் கூட்டணிக்கு வரும் கட்சிகளுக்கு ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு கொடுப்போம் என கூறியிருந்தார். தமிழக அரசியல் வரலாற்றில் காங்கிரஸ்,திமுக, அதிமுக போன்ற எந்த கட்சியும் இதுவரை அப்படி சொன்னதில்லை.
ஆட்சி மற்றும் அதிகாரத்தில் மற்றொரு கட்சி பங்கீடு செய்வதை அதிமுக, திமுக கட்சிகள் விரும்பியதே இல்லை. கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட்டாலும் கூட்டணிக்கு தலைமை தாங்கும் கட்சியில் யார் முதலமைச்சர் வேட்பாளரோ அவர்தான் 5 வருடம் முதல்வராக இருப்பார். இதுதான் நடைமுறை. ஆனால் விஜய் ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு என அறிவித்தார். அப்படி அறிவித்தால் தங்களுடன் நிறைய கட்சிகள் கூட்டணி அமைக்கும் என என்பது விஜயின் கணக்காக இருந்தது..
தற்போது காங்கிரஸ் கூட திமுகவுடன் இதே கோரிக்கையை முன்வைத்து பேரம் பேசி வருகிறது. அதாவது எத்தனை நாளைக்குதான் நாங்கள் இப்படியே இருக்க முடியும்.. எங்களுக்கும் ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு கொடுங்கள் என திமுகவை கேட்டு வருகிறது. ஆனால் திமுக அதற்கு இப்போது வரை சம்மதிக்கவில்லை.
ஆனாலும் தவெக பக்கம் காங்கிரஸ் செல்லவில்லை. காங்கிரஸ் மட்டுமல்ல.. தேமுதிக, ராமதாஸ் தலைமையிலான பாமக போன்ற கட்சிகளும் தவெகவை காட்டியே திமுகவிடம் கூட்டணி பேரத்தில் ஈடுபட்டிருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. தமிழகத்தில் உள்ள மற்ற கட்சிகள் எல்லாம் ஏதோ ஒரு கூட்டணியில் இணைந்து விட்ட நிலையில் தேமுதிக, காங்கிரஸ், ராமதாஸ் தலைமையிலான பாமக ஆகிய மூன்றும் இதுவரை கூட்டணி அமைக்காமல் திமுகவுடன் தொடர்ந்து பேசி வருகிறது. அந்த கட்சிகள் எக்காரணத்தைக் கொண்டு விஜயின் தவெக பக்கம் சென்று விடக்கூடாது என திமுக கருதுகிறது. இதை பயன்படுத்தி அந்த கட்சிகளும் திமுகவுடன் கூட்டணி பேரத்தில் ஈடுபட்டு வருகிறது.
அதாவது விஜயை அந்த கட்சிகள் கூட்டணி பேரத்துக்காக பயன்படுத்திக் கொண்டது. எனவே அது அவர்களுக்குதான் லாபமே தவிர விஜய்க்கு எந்த லாபமும் இல்லை. விஜய்க்கும் இது புரிந்து விட்டது.. அதனால்தான் சமீபத்தில் தவெக விழாவில் பேசிய அவர் கூட்டணி யாரும் வரவில்லை என்றாலும் தனித்து நின்று தேர்தலை சந்திப்போம் என அவர் கூறியிருந்தார்.. ஆனாலும் காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகள் தங்கள் பக்கம் வரும் என விஜய் இன்னும் நம்பிக் கொண்டிருப்பதாக தெரிகிறது.
விஜய் எதிர்பார்ப்பது நடக்குமா இல்லை இலவு காத்த கிளியாக முடியுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்..