திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.யான கல்யாண் பானர்ஜி அவர்களின் நீண்ட நாட்களாக பயன்படுத்தப்படாத வங்கிக் கணக்கில் இருந்து ரூ.57 லட்சம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கல்யாண் பானர்ஜி எம்.எல்.ஏ.வாக இருந்தபோது தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் தொடங்கப்பட்ட அவரது செயலற்ற கணக்கை பயன்படுத்திய மோசடியாளர்கள், போலி ஆதார் மற்றும் பான் அட்டைகளை பயன்படுத்தி, அந்த கணக்குடன் போலியான மொபைல் எண்ணை இணைத்துள்ளனர். இதன் மூலம் ஓ.டி.பி. பெற்று, பல பரிவர்த்தனைகள் வாயிலாக ரூ.57 லட்சத்தை திருடி சென்றுள்ளனர்.
மோசடி குறித்து எம்.பி. புகார் அளித்த உடனேயே, வங்கி நிர்வாகம் தலையிட்டு, திருடப்பட்ட முழு பணத்தையும் உடனடியாக அவரது கணக்கிற்கு திருப்பி அளித்துவிட்டது. இது தொடர்பாக வங்கி சார்பில் கொல்கத்தா காவல்துறையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
"ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் கணக்கிலேயே இப்படியொரு முறைகேடு நடக்கிறது என்றால், சாதாரண மக்களின் நிலை என்னவாகும்?" என்று கேள்வி எழுப்பிய கல்யாண் பானர்ஜி, மோசடியில் ஈடுபட்டவர்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று கவலை தெரிவித்தார்.
காவல்துறை சிசிடிவி மற்றும் பரிவர்த்தனை விவரங்களை கொண்டு மோசடியாளர்களை தேடி வருகிறது.