டிஜிட்டல் அல்லது இ-தங்கம் திட்டங்களில் முதலீடு செய்வோருக்கு செபி கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த முதலீடுகள் செபி கட்டுப்பாட்டு வரம்பிற்குள் வரவில்லை என்றும், இதில் கணிசமான அபாயங்கள் இருப்பதாகவும் அது தெளிவுபடுத்தியுள்ளது.
ஆன்லைன் தளங்கள் 'டிஜிட்டல் தங்கம்' எனப்படும் ஒரு தயாரிப்பை, "உண்மையான தங்கத்திற்கு எளிய மாற்று" என கூறி அதிகளவில் விளம்பரப்படுத்துகின்றன. இது, ஆப்ஸ் அல்லது இணையதளங்கள் மூலம் சிறிய அளவிலான தங்கத்தை வாங்கும் முறையாகும். நீங்கள் செலுத்தும் தொகைக்குச் சமமான 24K உண்மையான தங்கம், பாதுகாப்பான பெட்டகங்களில் சேமிக்கப்படுவதாக நிறுவனங்கள் கூறுகின்றன.
டிஜிட்டல் தங்கம் குறித்த முதலீடுகள் பத்திரங்களாக வகைப்படுத்தப்படவில்லை என்றும், அவை கமாடிட்டி பொருளாகவும் ஒழுங்குபடுத்தப்படவில்லை என்றும் செபி திட்டவட்டமாக அறிவித்துள்ளது. மேலும் டிஜிட்டல் தங்கம் செபி அல்லது ரிசர்வ் வங்கியால் கண்காணிக்கப்படவில்லை என்றும், முதலீட்டாளர் பாதுகாப்புக்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்றும், இந்த முதலீடு முழுவதுமாக, அதை விற்கும் நிறுவனத்தின் நேர்மை மற்றும் நிதி நிலைத்தன்மையை பொறுத்தது என்றும் செபி கூறியுள்ளது..
செபி பரிந்துரைக்கும் கட்டுப்படுத்தப்பட்ட தங்க முதலீட்டு வழிகள்:
தங்க இடிஎஃப்-கள்
அரசு வெளியிடும் சாவரின் கோல்ட் பாண்டுகள்
செபியால் அங்கீகரிக்கப்பட்ட எலெக்ட்ரானிக் கோல்ட் ரசீதுகள்