மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ஆர்.எஸ்.எஸ். இந்திய நாட்டின் பல்வேறு முக்கிய நிறுவனங்களை கைப்பற்ற முயற்சிப்பதாக குற்றம் சாட்டினார்.
மக்களவையில் பேசிய அவர், “மகாத்மா காந்தியின் படுகொலைக்கு பிறகு ஆர்.எஸ்.எஸ்ஸின் அடுத்த திட்டம், இந்தியாவின் நிறுவன கட்டமைப்பை முழுவதுமாக கைப்பற்றுவதுதான்” என்று குறிப்பிட்டார்.
ஆர்.எஸ்.எஸ்.ஸின் இந்த முயற்சி நாட்டின் ஜனநாயக அமைப்புகளுக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது என்றும், நாட்டின் நீதித்துறை, நிர்வாகம் மற்றும் பிற முக்கிய அமைப்புகளின் சுதந்திரத்தையும் நடுநிலையையும் கேள்விக்குறியாக்குகிறது என்றும் ராகுல் காந்தி வலியுறுத்தினார்.
எதிர்காலத்தில் நாட்டின் ஜனநாயக மற்றும் அரசியல் அமைப்புகளை காக்கும் சவால் எதிர்க்கட்சிகளுக்கு இருப்பதாக அவர் குறிப்பிட்டார். இது மக்களவை அரங்கில் சலசலப்பை ஏற்படுத்தியது.
ராகுல் காந்தியின் இந்த கருத்து, ஆளும் தரப்புக்கு எதிராக நிறுவனங்களின் சுதந்திரம் குறித்து எதிர்க்கட்சிகள் எழுப்பி வரும் தொடர்ச்சியான குற்றச்சாட்டுகளை வலுப்படுத்துவதாக உள்ளது.