இந்திய விளையாட்டு கட்டமைப்பில் முக்கிய நகர்வாக, டெல்லியில் உள்ள பழமை வாய்ந்த ஜவஹர்லால் நேரு ஸ்டேடியம் வளாகம் இடிக்கப்பட உள்ளது. அதற்கு பதிலாக, 102 ஏக்கர் பரப்பளவில், அதிநவீன வசதிகளுடன் கூடிய 'ஸ்போர்ட்ஸ் சிட்டி' உருவாக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 2036 ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் இந்தியாவின் இலக்கைத் தீவிரமாக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு அமைச்சக அதிகாரிகள், உலகத் தரத்திலான விளையாட்டு வளாகங்களை கட்டியுள்ள கத்தார் மற்றும் ஆஸ்திரேலியாவின் உள்கட்டமைப்பு மாதிரிகளை ஆய்வு செய்து வருகின்றனர். இந்த ஆய்வுக்கு பிறகே கட்டுமான பணிகள் தொடங்கும்.
ஜவஹர்லால் நேரு ஸ்டேடியம், 1982 ஆசிய விளையாட்டு போட்டிகளுக்காக கட்டப்பட்டது. பின்னர் 2010 காமன்வெல்த் போட்டிகளுக்காக புதுப்பிக்கப்பட்டது. கிட்டத்தட்ட 60,000 பேர் அமரக்கூடிய வசதியுடன், தேசிய விளையாட்டு நிகழ்வுகள் மற்றும் சுதந்திர தின விழாக்கள் நடந்த ஓர் முக்கிய அடையாளமாக இது திகழ்ந்தது.
முன்மொழியப்பட்டுள்ள இந்த 'ஸ்போர்ட்ஸ் சிட்டி' வளாகத்தில், உயர்தர பயிற்சி வசதிகள், நவீன போட்டிகள் நடைபெறும் அரங்குகள் மற்றும் சர்வதேச தரத்திலான தடகள வீரர்களுக்கான உயர் செயல்திறன் மையங்கள் இடம்பெறும்.
குஜராத்தில் உள்ள சர்தார் வல்லபபாய் படேல் ஸ்போர்ட்ஸ் வளாகம் (250 ஏக்கர்) போன்ற பிரம்மாண்ட விளையாட்டு மையங்களை உதாரணமாக கொண்டு, இந்த புதிய நகரம் இந்திய விளையாட்டுக்கு ஒரு புதிய பாய்ச்சலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.