உத்தரப் பிரதேச மாநிலம் காஸியாபாத்தில், ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று சிறுமிகள் 9-வது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தொடக்கத்தில் இது கொரியன் கேம் விளையாட்டால் நடந்த தற்கொலை என தந்தை கூறினாலும், காவல்துறையினர் விசாரணையில் அதிர்ச்சியூட்டும் பல உண்மைகள் வெளிவந்துள்ளன.
தந்தை சேத்தன் குமார் 2 கோடி ரூபாய் கடன் சுமையில் இருந்ததும், மின்சார கட்டணம் செலுத்த மகள்களின் செல்போன்களை விற்றுவிட்டதும் தெரியவந்தது. வறுமையால் குழந்தைகள் பள்ளிக்கு அனுப்பப்படவில்லை. இதனால் மனமுடைந்த சிறுமிகள், கொரியன் நாடகங்களில் அதீத ஈடுபாடு கொண்டு, தங்களுக்கு கொரிய பெயர்களை சூட்டிக்கொண்டு அந்த மாய உலகிலேயே வாழ்ந்துள்ளனர்.
தந்தை செல்போன் தர மறுத்ததால் ஏற்பட்ட ஆத்திரமும், குடும்ப சூழலும் அவர்களை தற்கொலைக்கு தூண்டியிருக்கலாம் என போலீஸ் கருதுகிறது. அவர்கள் தங்கியிருந்த அறையில் குடும்ப புகைப்படங்கள் மற்றும் உருக்கமான டைரி குறிப்புகளை போலீஸார் மீட்டுள்ளனர். கடன் சுமை, குடும்பச் சிக்கல்கள் மற்றும் மொபைல் போன் அடிமைத்தனம் ஆகியவை இணைந்து இந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளன.