டெல்லி செங்கோட்டை அருகே கார் குண்டு தாக்குதல் நடத்திய ஃபரிதாபாத்தை சேர்ந்த மருத்துவர் உமர் தலைமையிலான பயங்கரவாத குழு, டெல்லியை தவிர மேலும் நான்கு நகரங்களில் தொடர் கார் வெடிகுண்டு தாக்குதல்களை நடத்த திட்டமிட்டிருந்ததாக தேசியப் புலனாய்வு அமைப்பு விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
மொத்தம் 8 பயங்கரவாதிகள் குழுக்களாக பிரிந்து, ஒரே நேரத்தில் 4 நகரங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டனர். இந்த குழுவினர் தாக்குதலுக்காக ரூ. 20 லட்சம் நிதி திரட்டியதுடன், குருகிராம் மற்றும் நுஹ் பகுதிகளில் இருந்து ரூ. 3 லட்சத்துக்கு 2,000 கிலோ NPK வெடிபொருட்களை வாங்கி ஐஇடி குண்டுகளை தயாரித்துள்ளனர்.
மருத்துவர் உமருடன் தொடர்பிலிருந்த மருத்துவர் முசம்மில்லுக்கு, 2021-22 காலகட்டத்தில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் பிரிவான அன்சார் கஸ்வத்-உல்-ஹிந்தின் அமைப்புடன் தொடர்பு இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.
தாக்குதலுக்கு பயன்படுத்த உமர் ஏற்பாடு செய்த சிவப்பு நிற கார் மீட்கப்பட்டுள்ளது. மேலும் இரண்டு கார்கள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் புலனாய்வு அமைப்புகள் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளன.