ஆசியக் கோப்பை பரபரப்பில்லாமல் நடந்து முடிந்தாலும் அந்த கோப்பையை சுற்றி உருவான சர்ச்சைகள் இன்னும் ஓய்ந்தபாடில்லை. இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை எதிர்த்து விளையாடி வென்ற இந்தியா வெற்றிக்குப் பின்னர் பாகிஸ்தான் அமைச்சரும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவருமான மோஷின் நக்வி கையால் கோப்பையை வாங்க மாட்டோம் என இந்திய அணி முடிவெடுத்ததால் கோப்பை இல்லாமல் இந்திய அணி வெற்றியைக் கொண்டாடியது.
அதனால் மோசின் நக்வி கோப்பையை பாகிஸ்தானுக்கு எடுத்துச் சென்றார். தற்போது வரை ஆசியக் கோப்பை இந்திய அணியிடம் வழங்கப்படவில்லை. இந்நிலையில் அது குறித்துப் பேசியுள்ள மோசின் “ஆசியக் கோப்பை வேண்டுமென்றால் இந்தியாவில் ஒரு பரிசளிப்பு நிகழ்ச்சியை நடத்திப் பெற்றுக் கொள்ளலாம்” எனக் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது மேலும் சர்ச்சைகள் வலுக்கக் காரணமாகியுள்ளது.
இந்நிலையில் இன்னும் இரண்டு நாட்களில் மும்பைக்கு ஆசியக் கோப்பையை அனுப்பி வைக்கவேண்டும் என பிசிசிஐ மோசின் நக்விக்கு காலக்கெடு விதித்துள்ளது. அப்படி ஆசியக் கோப்பை அனுப்பி வைக்காத பட்சத்தில் வரும் நான்காம் தேதி நடக்கவுள்ள ஐசிசி காலாண்டு கூட்டத்தில் இது சம்மந்தமாகக் குரலெழுப்ப பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஐசிசியின் தலைவராக முன்னாள் பிசிசிஐ தலைவர் ஜெய் ஷா இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.